- Home
- Sports
- Sports Cricket
- IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக வெளுத்துக் கட்டினார். யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார்.

யுவராஜ் சாதனையை முறியடித்த இஷான் கிஷன்
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இஷான் கிஷன் வெறும் 27 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், 2012 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த டி20 போட்டியில் 29 பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்தார்.
அதிவேக அரை சதம் யார்?
இந்தியா vs பாகிஸ்தான் டி20 போட்டியில் அதிவேக அரைசதம் அடித்தது பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் தான். அவர் 2012ம் ஆண்டு 23 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். கடந்த ஆண்டு துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 போட்டியில் அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
முன்னதாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பவுலிங்கில் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
இஷான் கிஷன் அதிரடி அரை சதம்
ஆனால் மறுமுனையில் இஷான் கிஷன் அதிரடியில் வெளுத்துக் கட்டினார். அப்ரார் அகமது, ஷதாப் கான் ஸ்பின் பவுலிங்கை சிக்சருமா, பவுண்டரியுமாக பறக்க விட்டார். அவருடன் சேர்ந்த திலக் வர்மா நிதானத்தை கடைபிடித்தார்.
இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதம் கடந்தார். எட்டாவது ஓவரில் 80 ரன்களைக் கடந்த இந்திய அணிக்கு, சயிம் அயூப் வீசிய ஒன்பதாவது ஓவரில் இரண்டாவது அடி விழுந்தது. அயூப்பிற்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்த கிஷன், அடுத்த பந்திலேயே போல்டாகி வெளியேறினார். இஷான் கிஷன் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் விளாசினார்.
பாண்ட்யா டக் அவுட்
கிஷன் ஆட்டமிழந்ததும் இந்தியாவின் ஸ்கோரிங் வேகம் வெகுவாகக் குறைந்தது. திலக் வர்மாவும், கேப்டன் சூர்யகுமார் யாதவும் இணைந்து 12-வது ஓவரில் இந்தியாவை 100 ரன்களைக் கடக்க வைத்தனர். பதினைந்தாவது ஓவரில் திலக் வர்மா சயிம் அயூப் பந்தில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பான்ட்யா அயூப் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.
சூர்யகுமார் தடுமாற்றம்
பதினேழாவது ஓவரில் அப்ரார் அகமதுவின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து சிவம் துபே இந்தியாவை 150 ரன்களைக் கடக்க வைத்தார். ஆனால், கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூர்யகுமார் யாதவை பத்தொன்பதாவது ஓவரில் உஸ்மான் தாரிக் ஆட்டமிழக்கச் செய்தார். 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த சூர்யா, மூன்று பவுண்டரிகளை மட்டுமே அடித்தார்.
இந்திய அணி 175 ரன்கள்
இருபதாவது ஓவரில் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்கள் எடுத்து இந்தியா 175 ரன்களை எட்டியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்காக ஆறு சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசினர். இந்திய இன்னிங்ஸில் 16 ஓவர்களை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சயிம் அயூப், பாகிஸ்தான் பந்துவீச்சில் ஜொலித்தார். உஸ்மான் தாரிக் நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்தார்.

