ஒரே மேட்ச்சில் கோலியின் ஆஸ்தான வீரராக மாறிய நடராஜன்..! பிரகாசமான இண்டர்நேஷனல் கிரிக்கெட் கெரியர் உறுதி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய முதல் டி20 போட்டியில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன். அவரை அணியில் எடுத்ததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
ஐபிஎல் 13வது சீசனில் அபாரமாக பந்துவீசி, தனது துல்லியமான யார்க்கர்கள் மற்றும் டெத் ஓவர்களில் சாமர்த்தியமான பவுலிங்கின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன், 16 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வீழ்த்திய விக்கெட்டுகள் மிக அதிகம் இல்லையென்றாலும், அந்த விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட சூழல், ஆட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அவை மிக முக்கியமான விக்கெட்டுகள்.
ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்ததுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனிலும் இடம்பிடித்து, 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடக்கும் முதல் டி20 போட்டியிலும் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இன்றைய போட்டியில் ஆடுவதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார் நடராஜன்.
கான்பெராவில் நடக்கும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். டாஸ் போடும்போது, நடராஜனை அணியில் எடுத்தது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நடராஜன் இன்றைய போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். 3வது போட்டியில் மிக நிதானமாகவும் தெளிவாகவும் இருந்தார். அதனால்தான் அவரை மீண்டும் அணியில் எடுத்துள்ளேன் என்று கேப்டன் கோலி கூறியுள்ளார்.
இதன்மூலம் கேப்டன் கோலியின் அபிப்ராயத்தை நடராஜன் பெற்றிருப்பதுடன், ஆஸ்தான வீரராகவும் ஆகிவிட்டார் என்பது தெளிவாகிறது. இது நடராஜனின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கு நல்லது.