Border Gavaskar Trophy - ஆஸி,க்கு எதிரான தொடரில் வெற்றி பெற இந்திய அணிக்கு ஸ்பெஷல் பயிற்சி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது.
பார்டர் கவாஸ்கர் டிராபி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூரில் உள்ள ஜம்தாபூவில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட் மற்றும் சூர்யகுமார் யாதவ்.
நாக்பூர்
நாக்பூர் வந்துள்ள இந்திய அணி அங்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் நடந்த 5 பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியா 4 முறையும், ஆஸ்திரேலியா ஒரேயொரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தகுதி பெற இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இரு அணிகளுக்கு இடையிலாக தற்போது நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியா 2-0 அல்லது 2-1 அல்லது 3-0 அல்லது 3-1 என்ற வெற்றி பெற வேண்டும்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து
இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரை முடித்து ஒரு சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு இந்தியா டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது: வீரர்கள் அனைவரும் உடல் தகுதியுடன் இருக்கிறார்கள்.
வெள்ளை நிற கிரிக்கெட்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் அணியை பார்க்கிறேன். கடைசியாக நாங்கள் விளையாடியது எல்லாமே வெள்ளை நிற கிரிக்கெட் போட்டிகள் தான். சில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று வீரர்களுக்கு தனி பயிற்சி கொடுக்க வேண்டியது கட்டாயம்.
டெஸ்ட் போட்டி
டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சி முகாமில் பங்கேற்பது மகிழ்ச்சி. மைதானமும் நன்றாக இருக்கிறது. போட்டியில் பீல்டிங்கும் ரொம்பவே முக்கியம். இதன் காரணமாக ஸ்லிப் பீல்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளித்து வருகிறோம்.
கேட்ச் பயிற்சி
வீரர்களுக்கு கேட்ச் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதுவரையில் அடுத்தடுத்து போட்டி இருந்ததால் வீரர்களிடம் சரியாக பேசக் கூட நேரமில்லை. இப்போதுதான் வீரர்களின் குறைகளை கண்டறிந்து அதனை சரி செய்து விளையாட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.