#AUSvsIND உண்மையாவே என்னைய விட ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் அவருதான்.! பாண்டியாவின் பெரிய மனசு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா, அந்த விருதுக்கு தன்னை விட நடராஜனே பொருத்தமானவர் மற்றும் தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி இன்று சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மேத்யூ வேடின் அதிரடி அரைசதத்தால், 20 ஓவரில் 194 ரன்களை குவித்தது.
195 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணிக்கு கேஎல் ராகுலும் தவானும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் ஐந்து ஓவர்களிலேயே 56 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய ராகுல் 22 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் தவானும் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடினர். அரைசதம் அடித்த தவான், 52 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கோலி 24 பந்தில் 40 ரன்கள் அடித்த நிலையில், அவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் வெளியேறினார். சஞ்சு சாம்சன் 10 பந்தில் வெறும் பதினைந்து ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
டெத் ஓவர்களில் தனது பணியை செவ்வனே செய்த ஹர்திக் பாண்டியா, 22 பந்தில் 42 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி 2 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா, கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி கடைசி ஓவரின் 4வது பந்திலேயே அணியை வெற்றி பெற செய்தார். 22 பந்தில் 42 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா பேசுகையில், கடைசி 30 பந்தில் 70-80 ரன்கள் தேவைப்பட்டால் கூட நான் கவலைப்படமாட்டேன். 12 பந்துகளாக பிரித்துத்தான் ஆடுவேன். அதைத்தான் இன்றும் செய்தேன். உண்மையாகவே, இந்த ஆட்டநாயகன் விருது நடராஜனுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.