நான் தோத்தாலும் நீ ஜெயிச்சுட்ட நண்பா அது பயங்கர சந்தோசம் எனக்கு உன்ன நெனச்சு பெருமையா இருக்கு நட்டு:வார்னர்
தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களின் நாயகனாக போற்றப்படுபவர்களில் பௌலர் நடராஜனும் ஒருவர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் மட்டுமே அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜன் விளையாடினார். இதன் மூலம் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி, டி20 போட்டி என அடுத்தடுத்து நடராஜனுக்கு ஆஸ்திரேலியத் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நடராஜன் அணியில் அனைவரது அபிமானத்தையும் வென்றிருக்கிறார். அதிக ரன்கள் குவிக்கப்பட்ட இந்த டி20 தொடரில் நடராஜன் மிகக் குறைவான ரன்களையே கொடுத்து முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். தொடர் நாயகனான ஹர்திக் பாண்டியாவே, தனது தொடர் நாயகன் தேர்வு நடராஜன்தான் என்று வாழ்த்தியுள்ளார்
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தோல்வியோ, வெற்றியோ நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் களத்திலும், களத்தைத் தாண்டியும் மதிக்கிறோம். நாங்கள் தொடரை இழந்துவிட்டாலும் நடராஜனை நினைத்து என்னால் சந்தோஷப்படாமல் இருக்க முடியவில்லை. அவ்வளவு இனிமையானவர். ஆட்டத்தை மிகவும் நேசிப்பவர். வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக அணிக்கு வந்து, முதன் முதலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியது என்ன ஒரு சாதனை நண்பா. வாழ்த்துகள்!" என்று வார்னர் வாழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், காயம் காரணமாக டேவிட் வார்னர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.