தனக்கு முன் ஜடேஜா, சாம் கரனை இறக்கிவிட்டது ஏன்..? தல தோனி அதிரடி விளக்கம்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தனக்கு முன்பாக ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகிய இருவரையும் இறக்கிவிட்டது ஏன் என சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், அபுதாபியில் நடந்த முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 163 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டிய சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி கணக்கை தொடங்கியது சிஎஸ்கே.
இந்த போட்டியில் முதல் 2 விக்கெட்டுகளை 2 ஓவரிலேயே இழந்துவிட்ட சிஎஸ்கே அணியை, டுப்ளெசிஸும் ராயுடுவும் இணைந்து காப்பாற்றினர். சிஎஸ்கே அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டு 71 ரன்னில் ஆட்டமிழந்தார் ராயுடு.
ராயுடு ஆட்டமிழந்ததுமே ரசிகர்கள் தோனி களத்திற்கு வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் ஜடேஜாவை இறக்கிவிட்ட தோனி, ஜடேஜா ஆட்டமிழந்தபிறகு, சாம் கரனை இறக்கிவிட்டார். தோனி இதோ இறங்குவார், இறங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் சாம் கரன் வெறும் ஆறு பந்தில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை அடித்து மிரட்டினார். சாம் கரன் ஆட்டமிழந்த பிறகுதான் தோனி 7ம் வரிசையில் களத்திற்கு வந்தார். ரன்னே அடிக்காமல் களத்தில் இருந்துவிட்டு சென்றார் தோனி.
இந்நிலையில், போட்டியின் முடிவில் இதுகுறித்து பேசிய தோனி, ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை அவர்களது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கும் விதமாக முன்வரிசையில் இறக்கிவிடப்பட்டனர்.
மும்பை இந்தியன்ஸின் 2 ஸ்பின்னர்களில் ஒருவர் வலது கை லெக் ஸ்பின்னர்(ராகுல் சாஹர்), மற்றொருவர் இடது கை ஸ்பின்னர்(க்ருணல் பாண்டியா) என்பதால், இருவரது பவுலிங்கையும் இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடமுடியும் என்பதால், இடது கை வீரர்களான ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் முன்வரிசையில் இறக்கப்பட்டனர். அதற்காக அவர்கள் இருவரும் எல்லா பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்பதில்லை. இது ஒரு சைக்கலாஜிகல் அட்டாக் என்று தோனி தெரிவித்தார்.