கிரிக்கெட் உலகையே அதிரவைத்த பும்ராவின் அதிரடி அரைசதம்..! அரண்டு கிடக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 நாள் பகலிரவு பயிற்சி போட்டியில் பும்ரா, மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இந்திய அணி சார்பில் அரைசதம் அடித்த ஒரே வீரரும் அவர்தான்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி, அதன்பின்னர் இந்த போட்டியைத்தான் பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆடவுள்ளது.
அந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணியும் ஆஸ்திரேலியா ஏ அணியும் மோதும் 3 நாள் பகலிரவு பயிற்சி போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. அந்த போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் பும்ராவை தவிர வேறு எந்த வீரருமே அரைசதம் அடிக்கவில்லை என்பதுதான் வியப்பான விஷயம்.
இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 29 பந்தில் 40 ரன்கள் அடித்தார். ஷுப்மன் கில் 43 ரன்களும் ஹனுமா விஹாரி 15 ரன்களும் அடித்தனர். மயன்க் அகர்வால், ரஹானே, பண்ட், சஹா ஆகிய அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, இந்திய அணி 123 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ராவும் முகமது சிராஜும் யாருமே எதிர்பார்க்காத வண்ணம், ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர்.
குறிப்பாக பிங்க் பந்தில் பும்ரா ஆடிய விதம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைத்து தரப்பையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிரடியாக ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கை அசால்ட்டாக அடித்து ஆடிய பும்ரா, ஆறு பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 57 பந்தில் 55 ரன்களை விளாசினார். இதுதான் முதல் தர கிரிக்கெட்டில் பும்ராவின் முதல் அரைசதம். முதல் அரைசதத்தை, ஆஸ்திரேலியாவில் அதுவும் பிங்க் பந்தில் அடித்து அசத்தியுள்ளார். கடைசி விக்கெட்டுக்கு பும்ராவும் சிராஜும் இணைந்து 71 ரன்களை சேர்த்தனர். சிராஜ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, 194 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி, 30 ஓவரில் 99 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.