#AUSvsIND நடராஜன், சுந்தர், தாகூர் அசத்தல்..! சூப்பரா ஆடி அவுட்டான ரோஹித்.. ஆட்டம் காட்டிய மழை
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசன் மழையால் பாதிக்கப்பட்டது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் அடித்தது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01ew26494bp08t2c4s722gpz40/marnus-labuschagne-jpg_300x449xt.jpg)
ஆஸி., அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் சதமடித்தார். ஆனால் சதமடித்த பின் அவரை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் 108 ரன்களில் நடராஜன் வீழ்த்தினார். ஆஸி., அணியின் முக்கியமான மற்று பெரிய பார்ட்னர்ஷிப்பான லபுஷேன் - மேத்யூ வேட் ஜோடியை நடராஜன் பிரித்தார். அவர்கள் இருவரையுமே நடராஜன் தான் வீழ்த்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்திருந்த ஆஸி., அணியின் கேப்டன் டிம் பெய்ன் மற்றும் கேமரூன் க்ரீன் ஜோடி 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தது.
அரைசதம் அடித்த டிம் பெய்னை சரியாக ஐம்பது ரன்களுக்கு ஷர்துல் தாகூர் வீழ்த்த, அவரை தொடர்ந்து கேமரூன் க்ரீனை 47 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, அதன்பின்னர், கம்மின்ஸை தாகூரும், நேதன் லயனை சுந்தரும், ஹேசில்வுட்டை நடராஜனும் வீழ்த்த, 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸி., அணி. அறிமுக வீரர்கள் நடராஜன், சுந்தர் ஆகியோரும் ஷர்துல் தாகூரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லை வெறும் 7 ரன்களுக்கு கம்மின்ஸ் வீழ்த்த, அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ரோஹித் சர்மா, 74 பந்தில் 44 ரன்கள் அடித்து நேதன் லயனின் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் களத்தில் நின்ற நிலையில் மழை குறுக்கிட்டது. மழையால், 2ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக்கிற்கு பின் ஆட்டம் நடக்கவேயில்லை. 3வது செசன் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.