ஐபிஎல் 2020: ஹர்பஜன் இல்லைனா என்ன மோசம் போச்சு..? கெத்து காட்டும் சிஎஸ்கே
ஐபிஎல் 13வது சீசனில் இருந்து சிஎஸ்கே அணியின் நட்சத்திர, சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் விலகியிருந்தாலும், ஹர்பஜன் சிங்கிற்கு மாற்றாக ஏகப்பட்ட தரமான ஸ்பின்னர்கள் சிஎஸ்கேவில் இருப்பதால் ஹர்பஜன் இல்லாதது சிஎஸ்கேவிற்கு ஒரு பாதிப்பே இல்லை என்றும் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தோனி தலைமையிலான சிஎஸ்கே வீரர்கள் துபாயில் தீவிரமாக பயிற்சி செய்துவருகின்றனர்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா மற்றும் சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் இந்த சீசனில் ஆடவில்லை. ஆனால் அவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. அணியில் பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் போதுமான அளவிற்கு திறமையான வீரர்களை பெற்றிருப்பதால், மாற்று வீரர்களை சிஎஸ்கே அறிவிக்கவில்லை.
2018 மற்றும் 2019 ஆகிய 2 சீசன்களிலுமே சிஎஸ்கே அணிக்கு பக்கபலமாக இருந்தவர் ஹர்பஜன் சிங். தனது அனுபவமான ஸ்பின் பவுலிங்கின் மூலம் முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். பவர்ப்ளேயில் அருமையாக வீசி, கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட அதிரடி வீரர்களை ஆரம்பத்திலேயே வீழ்த்தி அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங்.
ஐபிஎல் நடக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் சூடான சீதோஷ்ன நிலை இருக்கும் என்பதால், சீசனின் பிற்பாதியில் ஆடுகளங்கள் வறண்டு ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும். எனவே அனுபவமான ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் இல்லாதது பாதிப்பாக இருக்குமா என்றால், சிஎஸ்கேவிற்கு அது பாதிப்பாக இருக்காது என்று அகார்கர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அகார்கர், சிஎஸ்கே அணியில் போதுமான ஸ்பின்னர்கள் உள்ளனர். ஹர்பஜன் சிங் சீனியர் ஸ்பின்னர் தான். ஆனாலும் அவர் இல்லையென்றாலும், சமாளிக்கக்கூடிய அளவிற்கு சிஎஸ்கேவில், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், மிட்செல் சாண்ட்னெர் என தரமான ஸ்பின்னர்கள் ஏராளமாக சிஎஸ்கேவில் உள்ளனர்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே, 4வது முறையாக இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.