ஐபிஎல் 2020ல் அசத்திய மற்ற இளம் வீரர்களுக்கு முன்னாடியே இந்த பையன் தான் இந்திய அணியில் ஆடுவான் - அகார்கர்
ஐபிஎல் 13வது சீசனில் அசத்திய பல இளம் வீரர்களில் தன்னை பெரிதும் கவர்ந்த மற்றும் இந்திய அணியில் விரைவில் ஆடக்கூடிய வாய்ப்பை பெறும் வீரர் யார் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் நடந்த ஐபிஎல் 13வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், கார்த்திக் தியாகி ஆகிய வீரர்கள் அருமையாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமான இந்த இளம் வீரர்கள், விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார்கள். பல முன்னாள் வீரர்களும், இளம் வீரர்களை வியந்து புகழ்ந்துவரும் நிலையில், அஜித் அகார்கர், இளம் ஃபாஸ்ட் பவுலர் கார்த்திக் தியாகியால் அதிகம் கவரப்பட்டதாகவும், அவர் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்றும் அகார்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அகார்கர், இந்த ஐபிஎல்லில் நான் மிகவும் விரும்பி ரசித்து பார்த்தது ராஜஸ்தான் ராயல்ஸில் ஆடிய கார்த்திக் தியாகிதான். அவரது அணுகுமுறை கிரேட். ஐபிஎல்லில் ஒரு இளம் இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஆடுவது அவ்வளவு எளிதல்ல. அவருக்கு இந்த ஐபிஎல் சிறப்பானதாக அமைந்தது. இந்த அனுபவத்தின் மூலம் அவர் நிறைய கற்றிருப்பார். இந்திய அணிக்காக விரைவில் ஆடுவார் என்று அகார்கர் தெரிவித்தார்.