#AUSvsIND டெஸ்ட்: இந்திய அணியின் தொடக்கவீரர்கள் இவங்கதான்! சூப்பர் பேட்ஸ்மேனா இருந்தாலும் அவருக்கு சான்ஸ் இல்ல
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. இந்திய அணி ஆடப்போகும் 2வது பகலிரவு டெஸ்ட் போட்டி இது. இதுவரை ஒரேயொரு பகலிரவு டெஸ்ட், அதுவும் இந்தியாவில் ஆடியதுதான். வங்கதேசத்துக்கு எதிராக கடந்த ஆண்டு கொல்கத்தாவில் முதல் முறையாக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடியது. அதன்பின்னர் இப்போதுதான், பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடவுள்ளது.
அந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிங்க் பந்தில் பகலிரவு பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பும்ரா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவரை தவிர வேறு யாருமே அரைசதம் அடிக்கவில்லை. பிரித்வி ஷா 29 பந்தில் 40 ரன்கள் அடித்திருந்தார். 2வது இன்னிங்ஸில் பிரித்வி ஷா 3 ரன்களில் அவுட்டாக, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இந்திய டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷுப்மன் கில் ஆகியோர் இருப்பதால், தொடக்க வீரர்களாக யார் யார் இறங்குவார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்துவருகிறது. மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குவது உறுதி. அவருடன் இறங்கப்போவது யார் என்பதுதான் கேள்வி.
இந்நிலையில், அதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, பயிற்சி போட்டியில் கேஎல் ராகுல் ஆடவேயில்லை. எனவே அவரை இந்திய அணி இப்போதைக்கு கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே பயிற்சி போட்டிகளில் ஆடினர். எனவே அவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவுவது அப்பட்டமாக தெரிகிறது. பிரித்வி ஷா மற்றும் கில் ஆகிய இருவருமே கிட்டத்தட்ட ஒரே லெவலில் தான் ஸ்கோர் செய்தனர்.
ஆனாலும் மயன்க் அகர்வாலுடன் முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா தான் தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது. ஏனெனில் பயிற்சி போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலுமே பிரித்வி ஷா தான் தொடக்க வீரராக இறங்கினார். ஷுப்மன் கில் 3ம் வரிசையில் தான் இறக்கப்பட்டார் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.