அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ
நந்த கிஷோர் இயக்கத்தில் மோகன்லால் விஜயேந்திர விருஷபா, ஆதி தேவ வர்மா என இரட்டை வேடங்களில் நடித்துள்ள விருஷபா திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vrusshabha Movie Review
மோகன்லால் டைட்டில் ரோலில் நடித்துள்ள பான் இந்தியா திரைப்படம் விருஷபா. அறிவிக்கப்பட்டதிலிருந்தே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த இப்படத்தை கன்னடத் திரையுலகைச் சேர்ந்த நந்த கிஷோர் இயக்கியுள்ளார். மோகன்லால் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் ஒன்று வைர வியாபாரியான ஆதி தேவ வர்மா, மற்றொன்று பழைய விருஷபா சாம்ராஜ்யத்தின் ராஜாவான விஜயேந்திர விருஷபா.
விருஷபா விமர்சனம்
விருஷபா சாம்ராஜ்யத்தின் கதையைச் சொல்லித்தான் நந்த கிஷோர் படத்தை ஆரம்பிக்கிறார். ஆதி தேவ வர்மா, வணிக உலகில் மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆளுமை. அவர் தனது இளம் மகனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒருமுறை காட்டில் குதிரையில் எதிரியைத் துரத்தும்போது, தவறுதலாக ஒரு சிசுவைக் கொன்றுவிடுகிறார் ராஜா விஜயேந்திர விருஷபா. துயரத்தில் ஆழ்ந்த குழந்தையின் தாய், மனமுடைந்து ராஜாவை சபிக்கிறாள்.
பின்னர், விஜயேந்திர விருஷபாவிற்கு ஒரு மகன் வாரிசாகப் பிறக்கிறான். ஆனால், அந்தத் தாயின் சாபம், அவன் மனதில் அணையாத கனலாக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து ஒரு விபத்தும் நிகழ்கிறது. இந்த இரண்டு உலகங்களில் உள்ள, முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்களின் கதைகளை, இயக்குனர் நந்த கிஷோர் ஒரு வித்தியாசமான முறையில் இணைத்துள்ளார். அதில் பேண்டஸி, புராணம், ஆக்ஷன், காதல் என அனைத்தும் உள்ளன.
விருஷபா படம் எப்படி இருக்கு?
மோகன்லால் ராஜாவாக வரும் பகுதியும் அதன் கதையும், ஒரு அமர் சித்ர கதையைப் போல ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டுகிறது. மறுபுறம், ஆதி தேவ வர்மா தற்போது சந்திக்கும் நெருக்கடிகள் மூலம் இயக்குனர் பார்வையாளர்களிடையே பதற்றத்தை உருவாக்குகிறார். இந்த இரண்டு காலகட்டங்கள், கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள் படம் முன்னேறும்போது ஒரே கதைக்களத்தில் இணைகின்றன. அதுதான் இதன் சுவாரஸ்யமும்.
ஏன் இந்தப் படத்தில் மோகன்லால் என்பதற்கான பதில், இரண்டு கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பில் உள்ளது. குறிப்பாக விஜயேந்திர விருஷபாவாக அவரது நடிப்பு வேறலெவல். விஜயேந்திர விருஷபாவும் ஆதி தேவ வர்மாவும் வெளித்தோற்றத்தில் வலிமையானவர்களாகத் தோன்றினாலும், உணர்ச்சிப்பூர்வமான பலவீனத்தின் ஒரு தனிப்பட்ட இடத்தை இருவரும் தங்களுக்குள் வைத்திருக்கிறார்கள். விஜயேந்திர விருஷபா பயம் கொண்டவராக இருந்தால், ஆதி தேவ வர்மா மனதளவில் காயப்பட்டவராக இருக்கிறார்.
விருஷபா ரிவ்யூ
ஆக்ஷன் காட்சிகளிலும், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் ஒருசேர ஜொலிக்கக்கூடிய சிறந்த நடிகரால் மட்டுமே நடிக்கக்கூடிய கதாபாத்திரங்கள் இவை. அதனால்தான் இந்தப் படம் மோகன்லாலிடம் வந்துள்ளது. ஆதி தேவ வர்மாவின் மகனாக சமர்ஜித் லங்கேஷ் நடித்துள்ளார். நெருக்கமான அப்பா-மகனாக இருவரின் காம்பினேஷனும் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக உள்ளது. நயன் சரிகா, சமர்ஜித்தின் நாயகியாக படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராகினி த்விவேதி படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரம். நேஹா சக்சேனா, ராமச்சந்திர ராஜு, கிஷோர் எனப் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் உள்ளனர். ஆண்டனி சாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பேண்டஸி ஆக்ஷன் டிராமா வகையில் 'விருஷபா' ஒரு வித்தியாசமான முயற்சி. இதுபோன்ற ஒரு படத்தில் மோகன்லால் இதுவரை நடிக்கவில்லை என்பதுதான் சுவாரஸ்யம்.

