எர்ணாகுளம் மாவட்டம் தேவராவில் உள்ள மோகன்லால் வீட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் சிக்கின.
Mohanlal Ivory Tusk Case : யானைத் தந்தம் வழக்கில் நடிகர் மோகன்லால் மற்றும் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மோகன்லால் யானைத் தந்தம் வைத்திருந்ததை சட்டப்பூர்வமாக்கிய அரசு உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இது தொடர்பாக புதிய அறிவிப்பாணையை வெளியிட அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைத் தந்தத்தை சட்டப்பூர்வமாக்கிய அரசு நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
2015-ஆம் ஆண்டு அரசு அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்படாததே தவறு என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தொழில்நுட்ப நடைமுறை குறைபாடுகள் காரணமாகவே யானைத் தந்தம் வைத்திருப்பதற்கான உரிமத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மோகன்லால் யானைத் தந்த வழக்கு
2011 ஆகஸ்ட் மாதம், எர்ணாகுளம் தேவராவில் உள்ள மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கைப்பற்றப்பட்டபோது, அவற்றை வைத்திருப்பதற்கான உரிமம் மோகன்லாலிடம் இல்லை.
பின்னர், மோகன்லாலின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து அரசு அவருக்கு உடைமைச் சான்றிதழ் வழங்கியது. ஆனால், 2015-ல் உடைமைச் சான்றிதழ் வழங்கும்போது, அது தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்படவில்லை என்பதை நீதிமன்றம் அரசின் பிழையாகக் கண்டறிந்துள்ளது. அரசு நடவடிக்கையில் ஏற்பட்ட இந்தத் தவறு காரணமாக, அந்த உரிமம் செல்லாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
