தடயம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ஷிவதா ஆகியோர் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகி வரும் தடயம் வெப் தொடரின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Thadayam Web Series Review
1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதிகளில் நடந்த அதிரவைக்கும் உண்மைச் சம்பவங்களைத் தழுவி தடயம் வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் ஏழு கொலைகளை மறைப்பதற்காக, அதிகார வர்க்கத்தின் சுயநலத்தால் மேலும் 76 உயிர்கள் பலிகடா ஆக்கப்பட்ட ஒரு கருப்புப் பக்கத்தை 'தடயம்' வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
தடயம் வெப் சீரிஸ் விமர்சனம்
எஸ்.ஐ அதியமானாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். படத்தின் முதுகெலும்பே இவர்தான். போலீஸ் ஸ்டேஷனை விட டீக்கடையிலேயே தவம் கிடக்கும் ஒரு 'கேர்லெஸ்' அதிகாரி. உயரதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்காத தெனாவட்டு, டிஎஸ்பியால் 'ஜேம்ஸ்பாண்ட்' என்று கிண்டல் செய்யப்படும் அலட்சியம் என ஆரம்பத்தில் அறிமுகமாகும் இவர், புலனாய்வில் இறங்கியவுடன் காட்டும் வேகம் அபாரம். இவருடன் சேர்ந்து நாமும் அந்தத் தடயங்களைத் தேட ஆரம்பித்துவிடுவதுதான் திரைக்கதையின் வெற்றி.
தடயம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
இன்ஸ்பெக்டர் லெட்சுமியாக வரும் ஷிவதா, காக்கி உடையில் மிடுக்கும், நிச்சயதார்த்தப் பெண்ணாக சேலையில் வரும்போது காட்டும் நளினமும் ஷிவதாவின் நடிப்பிற்குப் புதிய பரிமாணம். சமுத்திரக்கனியுடன் இணைந்து குற்றவாளிகளை நெருங்கும் அந்தப் பயணத்தில் இவரது பங்கும் கச்சிதம். அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக மனிதாபிமானம் இன்றிச் செயல்படும் ஆந்திர உயரதிகாரியாக சுந்தரபாண்டியன் நடிப்பில் மிரட்டுகிறார். பழிவாங்கும் வெறியில் ஊரையே சுடுகாடாக்கும் அண்ணன்-தம்பி கதாபாத்திரங்கள் பார்ப்பவர்களைப் பதறவைக்கின்றன. குறிப்பாக அண்ணனாக வரும் ராஜ் திரந்தஸின் உடல்மொழி பயங்கரம்.
தடயம் வெப் சீரிஸ் ரிவ்யூ
எளிய பட்ஜெட்டில் உருவானாலும், ஒரு தரமான சினிமா அனுபவத்தைத் தருகிறது 'தடயம்'. வறண்ட நிலப்பரப்பையும், கொலைகளின் தீவிரத்தையும் தனது கேமரா கண்களால் பிரம்மாண்டமாகக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர். கதையின் பதற்றத்தை ஒவ்வொரு காட்சியிலும் அதிகரிக்கச் செய்யும் பின்னணி இசை, தொடரின் விறுவிறுப்பிற்குப் பெரும் பலம். நவீன்குமார் பழனிவேல் ஒரு சிக்கலான நிஜக் கதையை, தேவையற்ற சமரசங்கள் இன்றி இயக்கியிருக்கிறார்.
பிளஸ் & மைனஸ்
தமிழக - ஆந்திர காவல்துறையினரிடையே இருக்கும் ஈகோ மற்றும் போட்டி பொறாமைகளைத் தோலுரித்துக் காட்டிய விதம். சமுத்திரக்கனியின் எதார்த்தமான நடிப்பு. விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மைனஸ் என்னவென்றால், சில இடங்களில் வரும் அதீத வன்முறை காட்சிகள் மென்மையான மனதுடையவர்களைக் கொஞ்சம் சங்கடப்படுத்தலாம்.
அதிகாரப் பசிக்கு எளிய மக்கள் எப்படிப் பலியாகிறார்கள் என்பதையும், காவல்துறையின் இருண்ட பக்கங்களையும் 'தடயம்' துணிச்சலாகப் பேசியிருக்கிறது. ஒரு சைக்கோ திரில்லர் பாணியில் தொடங்கி, சமூக நீதியைப் பேசும் இந்தத் தொடர், த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு விருந்து.

