TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், திருமாவளவனின் நம்பிக்கைக்குரிய தளபதியுமான வன்னியரசு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. விசிக-வின் முதல் அமைச்சராகி 'அதிகாரப் பகிர்வு' எனும் கட்சியின் நீண்ட நாள் கொள்கையை இவர் நனவாக்கியுள்ளார்.

வன்னியரசு எனும் நான்: திருமாவின் படைத்தளபதி!
எப்போதும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் நீண்ட கால நோக்கில் அதன் இலக்கை அடையும். அந்த வகையில் தற்போது அடித்தட்ட மக்களுக்காக களம் இறங்கி போராடி வந்த ஒருவர் அமைச்சராகும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. "அதிகாரப் பகிர்வு என்பது அண்ணல் அம்பேத்கரின் கனவு; அதை நோக்கித்தான் எங்கள் பயணம்" என்று முழங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருப்பவர் வன்னியரசு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) துணைப் பொதுச்செயலாளராகவும், தற்போது தமிழக அமைச்சராகவும் உயர்ந்திருக்கும் இவர், விசிக தலைவர் தொல். திருமாவளவனின் மிக நம்பிக்கையான, போர்க்குணம் மிக்க படைத்தளபதியாக அறியப்படுகிறார்.

எளிய பின்னணியும் அரசியல் எழுச்சியும்
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தைச் சேர்ந்த வன்னியரசு, எளிய பின்னணியில் இருந்து தன் அயராத உழைப்பால் உயர்ந்தவர். இவருக்கு ஜெமிமா ஆலீஸ் மனோகரி என்ற மனைவியும், பைந்தமிழ் வளவன், திலீபன் செந்தமிழ் என இரு மகன்களும் உள்ளனர். விசிக-வின் கொள்கைப் பரப்புரையாளராகவும், ஊடக விவாதங்களில் கட்சியின் முகமாகவும் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மேடைகளிலும் களத்திலும் ஒலித்து வருகிறார். இளஞ்சிறுத்தையாய், திருமாவளவனின் தம்பியாய் களத்தில் சீறிபாய்ந்த வந்த இவருக்கு தற்போது விஜய் ஆட்சியில் அமைச்சராகியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக தடம் பதிப்பு
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத் தேர்தலில், திண்டிவனம் தொகுதியில் விசிக வேட்பாளராகக் களம் இறங்கினார். கடும் போட்டிக்கிடையே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.விசிக சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் அமைச்சர் பதவி இவரை தேடி வந்துள்ளது. அம்பேத்கர் வழியில் மக்கள் சேவையாற்றி வரும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் விசிக-வின் மய்யப்புள்ளி
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சியில், 'அதிகாரப் பகிர்வு' என்ற விசிக-வின் நீண்ட நாள் கொள்கை முழக்கத்தை நனவாக்கும் வகையில் வன்னியரசு அமைச்சராகப் உயர்ந்துள்ளார். "தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள்தான் மய்யம் என்பதை மீண்டும் எங்கள் தலைவர் திருமாவளவன் நிரூபித்துள்ளார் என மார்த்தட்டும் வன்னியரசு, விசிக-வின் முதல் அமைச்சராக, அதிகார விளிம்பில் இருக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப் பயணத்திற்காகவும் தமிழக அமைச்சரவையில் தன் முத்திரையைப் பதிப்பேன் என கூறியுள்ளார்.

