- Home
- Politics
- இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை..! அதிமுகவில் எடப்பாடியின் ருத்ரதாண்டவம்..! கதிகலங்கும் சீனியர்கள்..!
இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை..! அதிமுகவில் எடப்பாடியின் ருத்ரதாண்டவம்..! கதிகலங்கும் சீனியர்கள்..!
ஜெயலலிதா பாணியில் தனித்து நின்று முடிவெடுக்கும் ஒரு சுப்ரீம் பவராக ஆக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். இந்த ஆபரேஷன் க்ளீன் ஸ்வீப் அதிமுகவிற்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சுமா? அல்லது உட்கட்சிப் பூசலுக்கு வழிவகுக்குமா?

மாஜிகளின் முகத்திற்கு நேராக கறார்
தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தில் தகித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதிமுக தலைமையில் இருந்து கிளம்பும் தகவல்கள் அறிவாலயத்தையே உற்றுநோக்க வைத்திருக்கின்றன. யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைவிட யாருக்கெல்லாம் கொடுக்கக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் வேகம், அக்கட்சியின் மூத்த தலைவர்களையே கதிகலங்க வைத்துள்ளது.
அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும் தங்களது வாரிசுகளுக்கும், விசுவாசிகளுக்கும் சீட் வாங்கிவிடலாம் எனப் பெரிய பட்டியலோடு எடப்பாடியைச் சந்திக்கச் சென்றால், அங்கே அவர்களுக்குக் கிடைப்பது காரசாரமான பதில்கள் தான்.
"உங்க தொகுதி வேலையை மட்டும் பாருங்க, முதல்ல ஜெயிச்சுட்டு வாங்க... மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என முகத்திற்கு நேராக எடப்பாடி பழனிசாமி சொல்லும் ஒற்றை வரி, பல முன்னாள் அமைச்சர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. குறுநில அரசியல் செய்து வந்த மூத்த தலைவர்களின் சிபாரிசுகளை ஓரம் தள்ளிவிட்டு, கட்சியின் கடிவாளத்தைத் தன் கையில் இறுக்கமாகப் பிடித்துள்ளார் எடப்பாடி.
எடப்பாடியின் சீக்ரெட் உளவுப்படை
வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி இந்த முறை எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இல்லை. பொதுவாக கட்சி நிர்வாகிகள் தரும் ரிப்போர்ட்டை வைத்துத்தான் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். ஆனால், இபிஎஸ் ஒரு படி மேலே போய், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரிகள், நடுநிலையான முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு ரகசியக் குழுவை அமைத்துள்ளார்.
தன்னுடைய தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் போதே, அந்தந்தத் தொகுதிகளில் யாருக்குச் செல்வாக்கு இருக்கிறது, யாருக்கு மக்களிடம் நற்பெயர் இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கெடுத்து வைத்துள்ளார். இந்த ரகசியப் பட்டியலோடு, உளவுத்துறை அதிகாரிகள் கொடுக்கும் கிரவுண்ட் ரிப்போர்ட் பொருந்தினால் மட்டுமே அவர்களுக்கு சீட் உறுதி என்கிறது எடப்பாடி பழனிசாமி வட்டாரம்.
விசுவாசிகளுக்கு க்ரீன் சிக்னல்
முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு சீட் உறுதி செய்யப்பட்டாலும், மீதமுள்ள தொகுதிகளில் 80% புதுமுகங்களைக் களமிறக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். வெறும் பணத்தை மட்டும் நம்பி வருபவர்களைத் தவிர்த்து, தொகுதியில் செல்வாக்குள்ள இளைஞர்கள், படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது ஓபிஎஸ் பக்கம் சாயாமல், எடப்பாடியுடன் நின்ற உண்மையான விசுவாசிகளுக்கு இந்த முறை ஜாக்பாட் அடிக்கப் போகிறது.
மாவட்டச் செயலாளர்களுக்கு விழுந்த அடி
மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைப்பவர்களே வேட்பாளர்கள் என்ற பழைய மரபை இபிஎஸ் உடைத்தெறிந்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தொகுதிகளில் கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, அவர்களை மற்ற தொகுதிகளில் தலையிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இது ஒருபுறம் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தாலும், மறுபுறம் சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் என்ன செய்வார்கள் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா பாணியில் தனித்து நின்று முடிவெடுக்கும் ஒரு சுப்ரீம் பவராக ஆக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். இந்த ஆபரேஷன் க்ளீன் ஸ்வீப் அதிமுகவிற்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சுமா? அல்லது உட்கட்சிப் பூசலுக்கு வழிவகுக்குமா? என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.
