குஷ்புவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமித் ஷா... அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தீவிர பிரச்சாரம்...!
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை இரவு 7 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் இறுதிக்கட்ட பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டி நிலவுவதால் பிரச்சார களமும் அனல் பறக்கிறது.
அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக சார்பில் தேசிய கட்சி தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி ராணி ஆகியோர் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் செய்துள்ள நிலையில், நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தடைந்தார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று துறைமுகம் தொகுதி வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இன்று காலை 10.45 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக, அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பாண்டி பஜார் நோக்கி பேரணியாகச் சென்று அமித் ஷா ஆதரவு திரட்டினார்.
அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்த அமித் ஷாவிற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கையில் அதிமுக, பாஜக கொடிகளை ஏந்திக்கொண்டு சாலையின் இருபுறத்திலும் நின்றபடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அலைகடலென திரண்டு ஆராவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது மலர்களைத் தூவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தேனாம்பேட்டை, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித் ஷாவுடன் வேட்பாளர்கள் குஷ்பு, ஜான்பாண்டியன், சைதை துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது கூட்டத்தினரிடையே உரையாற்றிய குஷ்பு, “உங்களுடைய எழுச்சியை பார்க்கும் போது நம்முடைய வெற்றி நிச்சயமாகிவிட்டது. நம்முடைய இந்த எழுச்சி மூலமாக திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என தெரிவித்தார்.