தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்...மதுரை தம்பதியர் பரபரப்பு விளக்கம்...என்ன இப்படி சொல்லிட்டாங்க?
Dhanush Case: மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் எங்கள் மகன் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் எங்கள் மகன் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
கதிரேசன்- மீனாட்சி தம்பதி தம்பதியினர்:
2012ஆம் ஆண்டு, இவர்களது மூத்த மகன் கலையரசன் பிளஸ் ஒன் படிக்கும் போது காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் எனவும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது.
அத்துடன், தனுஷ் தங்களுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். இந்த வழக்கை பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
வக்கீல் நோட்டீஸ்:
இதையடுத்து, நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு கதிரேசன் தம்பதியினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸில், கஸ்தூரிராஜா தங்களைக் கொலை செய்ய முயற்சித்ததாகவும், அதற்காக நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும், குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு:
இந்நிலையில் மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில், தற்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மீறினால் ரூ 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் எனவும், கதிரேசன் தம்பதியினருக்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை தம்பதியர் கூறிய பரபரப்பு விளக்கம்:
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மதுரை தம்பதியர், அதில் 'இதுவரை தங்களுக்கு எந்த நோட்டீஸும் கிடைக்கவில்லை.கடந்த 15 நாள்களுக்கு முன்பு நாங்கள் தான் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்' என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.