- Home
- இந்தியா
- யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் செக்.. புதிய விதிமுறைகளுக்கு அதிரடி தடை! நீதிபதிகள் சொன்ன காரணம் இதுதான்!
யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் செக்.. புதிய விதிமுறைகளுக்கு அதிரடி தடை! நீதிபதிகள் சொன்ன காரணம் இதுதான்!
யுஜிசி புதிய விதிகள் சமத்துவத்திற்குப் பதிலாக கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் பாகுபாட்டை ஊக்குவிக்கும் என பல்வேறு இடங்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அண்மையில் கொண்டு வந்த 'உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள் 2026' என்ற புதிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 29) அதிரடியாக தடை விதித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை தடுக்கும் வகையில் யுஜிசி இந்த புதிய விதிகளை கொண்டு வந்தது.
பொதுப்பிரிவினரை ஒதுக்கி வைக்கும் விதிகள்
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யட்டது. யுஜிசியின் புதிய விதிகள் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு எதிராக நடப்பதை மட்டுமே குறிக்கும் என வரையறுக்கப்பட்டிருந்தது.
இது பொதுப்பிரிவினரை ஒதுக்கி வைப்பதாக அமைந்துள்ளது. இது சமூகத்தில் மேலும் பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் யுஜிசியின் புதிய விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்து இருந்தனர்.
உச்சநீதிமன்றம் சொன்ன காரணம்
இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு தடை விதித்துள்ளது. யுஜிசியின் புதிய விதிமுறைகள் முற்றிலும் தெளிவற்றதாக உள்ளது. இது தவறாகப் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு யுஜிசி விதிமுறைகளே தொடர்ந்து பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
யுஜிசியின் புதிய விதி என்ன சொல்கிறது?
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட யுஜிசி புதிய விதிமுறைகள், குறிப்பாக பட்டியல் சாதிகள் (SC), பழங்குடியினர் (ST), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs) பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் புகார்களைக் கையாள, நிறுவனங்கள் சிறப்பு குழுக்கள் மற்றும் உதவி எண்களை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
பொதுப்பிரிவு மாணவர்கள் போராட்டம்
யுஜிசியின் புதிய விதிமுறைகள் பொதுப் பிரிவு மாணவர்களிடையே பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த கட்டமைப்பு தங்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்ட வழிவகுக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விதிகள் சமத்துவத்திற்குப் பதிலாக கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக பல்வேறு இடங்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்திருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''யுஜிசியின் புதிய விதிகளில் யாருக்கும் எந்தப் பாகுபாடும் காட்டப்படாது. சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும் நான் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

