போக்குவரத்து அபராதம் செலுத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா!
கர்நாடகாவில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா மற்றும் பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோரின் வாகனங்களுக்கான அபராதங்களும் செலுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து துறைக்கு அபராதம் செலுத்தி முதல்வர்
கர்நாடகாவில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா மற்றும் பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோரின் அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கான அபராதங்களும் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அதிகாரப்பூர்வ காரான டொயோட்டா ஃபார்ச்சூனர், பெங்களூருவின் இன்டெலிஜென்ட் டிராஃபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (ITMS) கண்காணிப்பு கேமராக்களில் பல முறை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஜனவரி 2024 முதல் ஆகஸ்ட் 2024 வரையிலான காலகட்டத்தில், ஆறு முறை சீட் பெல்ட் அணியாதது மற்றும் ஒரு முறை அதிவேகமாகச் சென்றது ஆகிய விதிமீறல்கள் அடங்கும். ஒவ்வொரு முறையும் முதல்வர் சித்தராமையா காரின் முன் இருக்கையில் பயணித்தபோது சீட் பெல்ட் அணியவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏழு விதிமீறல்களுக்கான மொத்த அபராதத் தொகை ரூ. 5,000 ஆக இருந்தது. கர்நாடக அரசின் 50% தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி, முதல்வர் அலுவலகம் மொத்தமாக ரூ. 2,500 செலுத்தி நிலுவையில் உள்ள அபராதங்களைச் சரிசெய்துள்ளது. இந்த அபராதங்கள் எந்தவிதமான சிறப்புச் சலுகையும் இன்றி சாதாரண நடைமுறைகளின்படியே செலுத்தப்பட்டதாக பெங்களூரு போக்குவரத்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
50% தள்ளுபடி திட்டம்
இதேபோல, கர்நாடகா பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திராவின் வாகனமும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருந்தது. இதில் சீட் பெல்ட் அணியாதது, அதிவேகம், சிக்னல் ஜம்ப் போன்ற பத்து விதிமீறல்கள் அடங்கும். அவரது அலுவலகம் 2020 முதல் நிலுவையில் இருந்த ரூ. 3,250 அபராதத்தை இந்த 50% தள்ளுபடி திட்டத்தின் மூலம் செலுத்தியுள்ளது.
கர்நாடக அரசு ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 12 வரை, நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் 2019 முதல் 2025 வரை சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான 3 கோடி போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் சனிக்கிழமை வரை, 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ. 45 லட்சத்திற்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.