- Home
- இந்தியா
- Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வந்தாச்சு! எந்த ரூட்டில் இயக்கம்? என்னென்ன சிறப்பம்சம்?
Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வந்தாச்சு! எந்த ரூட்டில் இயக்கம்? என்னென்ன சிறப்பம்சம்?
Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17 ஆம் தேதி முதல் ஹரியானா மாநிலத்தில் இயங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரயிலின் ரூட், சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்
இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய புரட்சியாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் (Jind) மற்றும் சோனிபட் (Sonipat) இடையே விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஜூலை 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய ஹைட்ரஜன் ரயில் சேவை, 74010/74009 என்ற எண்களில் தினசரி இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் தனது பயணத்தின் போது, ஜிந்த் சிட்டி, பாண்டு பிண்டாரா, லலித் கேடா, பம்பேவா, ஈஷாபூர் கேடி, புடானா, கந்த்ராய், கோஹானா, ரப்டா, லாத், மோகனா, ஹரியானா மற்றும் பர்வாஸ்னி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஹைட்ரஜன் ரயில் எத்தனை கிமீ வேகத்தில் போகும்?
இந்திய ரயில்வேயின் ஒப்புதல் பெற்றுள்ள இந்த ஹைட்ரஜன் எரிபொருள் ரயில், மொத்தம் 10 பெட்டிகளைக் கொண்டதாகும். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 1200 கிலோவாட் (kW) திறன் கொண்ட அதிநவீன ஹைட்ரஜன் எரிபொருள் செல் உந்துவிசை அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் என்பது ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ஒரு வேதியியல் வினை (Chemical reaction) மூலம் மின்சாரத்தை உருவாக்குவதாகும். இதன் சிறப்பம்சமே, இந்தச் செயல்பாட்டின் போது கார்பன் புகைக்குப் பதிலாக வெறும் 'நீராவி' மட்டுமே கழிவாக வெளியேறும். இதனால் புதைபடிவ எரிபொருட்களுக்கு (டீசல்) இது ஒரு மிகச்சிறந்த மாற்றாகும். இந்த பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தற்போது பெருமையுடன் இணைகிறது.
இதையும் படிங்க: விமானம் 2 மணி நேர பயணத்திற்கு எத்தனை லிட்டர் எரிபொருள் குடிக்கும் தெரியுமா? செலவு இத்தனை லட்சமா? தலைசுற்ற வைக்கும் உண்மை.!
பாதுகாப்பில் அதீத கவனம்
ஹைட்ரஜன் மிகவும் எரியக்கூடிய வாயு என்பதால், இந்தத் திட்டத்தில் பாதுகாப்பு விதிகளுக்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜிந்த் பகுதியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அழுத்தப்பட்ட ஹைட்ரஜன் வாயுவை பாதுகாப்பாகச் சேமித்து விநியோகம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உரிமத்தை 'பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு' (PESO) வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ரயில் சாப்பாடு 'சப்'பென்று இருக்கா? சமையல் காரணமல்ல; பின்னணியில் சயின்ஸ் இருக்கு!
ஹைட்ரஜன் டிடெக்டர்கள்
பாதுகாப்பு சென்சார்கள்: கசிவுகளை உடனுக்குடன் கண்டறியும் 'ஹைட்ரஜன் டிடெக்டர்கள்' மற்றும் தீயை உணரும் சென்சார்கள் அமைக்கப்பட்டு, அவை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
பராமரிப்பு விதிகள்: டெல்லியின் ஷகூர்பஸ்தி பகுதியில் இதற்கான பராமரிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரயில்வேயின் RDSO (Research Designs and Standards Organisation) அமைப்பு, இதற்கான பிரத்யேக இயக்க மற்றும் பராமரிப்பு வழிகாட்டுதல் கையேடுகளைத் தயாரித்து வழங்கியுள்ளது.
இந்தியாவின் கார்பன் உமிழ்வைக் குறைத்து, 2030-க்குள் 'நிகர பூஜ்ஜிய கார்பன்' (Net Zero Carbon) இலக்கை எட்ட நினைக்கும் இந்திய ரயில்வேயின் பயணத்தில், இந்த ஜிந்த்-சோனிபட் ஹைட்ரஜன் ரயில் சேவை ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

