ஸ்டாலின் அரசு எதிராக கொதிக்கும் கூட்டணி கட்சி தலைவர் வேல்முருகன்! நடந்தது என்ன?
வடமாநிலத் தொழிலாளர்கள் மூலம் தமிழ்நாட்டில் மதவெறி கலவரங்களை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

வேல்முருகன்
வடமாநில தொழிலாளர்கள் மூலமாக, குஜராத், உத்தரப்பிரதேசத்தை போன்று மதவெறி கலவரங்களை உருவாக்கி, அதை அரசியலாக்கி அதன் வாயிலாக, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடித்து மொத்த மண்ணின் மக்களை சிறுபான்மையாக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது சென்னை, திருப்பூர், அவிநாசி, கோவை, ஈரோடு, திருப்பெரும்புதூர் போன்ற பல இடங்களில் தமிழ்த் தொழிலாளிகளை வடமாநிலத் தொழிலாளிகள் தாக்குவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. அந்த கொடூர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பலபட்டியை சேர்ந்த சகோதரர் சரவணனை, செங்கல் சூலையில் வேலை செய்து வரும் வடமாநில கயவர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் வடமாநிலத்தவர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்களை தடுக்க, தமிழ்நாடு அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால், இது போன்ற கொடூரச் செயல்கள் அரங்கேறி இருக்காது.
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முயற்சி
ஆனால், தமிழ்நாடு காவல்துறையின் அலட்சியப் போக்கே, தற்போது காவல்துறையினரையை கொடூரமாக தாக்கும் அளவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. குற்ற நிகழ்வுகள் நடக்கும் போது மட்டும், வெளி மாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு காவல் துறையினர், இவர்களை முறையாக கண்காணிப்பதற்கான நிரந்தரப் பொறியமைவு எதையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. தமிழினத்தின் அரசுரிமையை மறுக்கின்ற ஒன்றிய அரசு, வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்குவித்து வளர்த்து, தமிழர் தாயகத்தை சிதைக்க முனைகின்றது. தமிழின அழித்தொழிப்பிற்கு அச்சாரமாக தமிழ்நாட்டு மண்ணில் ஆதிக்கம் செய்யும், பாஜக-வின் பின் புலத்துடன் வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் மூலமாக, குஜராத், உத்தரப்பிரதேசத்தை போன்று மதவெறி கலவரங்களை உருவாக்கி, அதை அரசியலாக்கி அதன் வாயிலாக, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடித்து மொத்த மண்ணின் மக்களை சிறுபான்மையாக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது.
உள்நுழைவு அனுமதிச் சீட்டு
ஒன்றிய பாஜக அரசு கொடுத்த தைரியத்தின் காரணமாக தான், கோவை, திருப்பூரில் இந்தியில் பிரச்சாரம், திருப்பூரில் கலவரம் ஆகிய குற்ற நிகழ்வுகள் அரங்கேறியது. எனவே, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழநாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
வடமாநிலத்தவர்களை, தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றவும்
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் குவித்து காணப்படுகின்ற வடமாநிலத்தவர்களை கண்காணிக்க, காவல்துறையில் தனி பிரிவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். கடந்த 2000ம் ஆண்டு குற்றப் பின்னணி கொண்ட 1,16,782 வெளி நாட்டவரை அமெரிக்கா, அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பியது. பின்னர் 2011ம் ஆண்டு, பல மடங்கு அதிகரித்து சற்றொப்ப 3 லட்சத்து 96,906 வெளி நாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு அமெரிக்கா திருப்பி அனுப்பியது. அதுபோன்று, குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்ற வடமாநிலத்தவர்களை, தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.
ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
வெளியாரை வெளியேற்றுவதென்பது வெறும், தமிழர்களின் வேலை-வாழ்வுரிமை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல, அது தமிழர் தாயகத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை என்பதையும், தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது. மேலும், வடமாநில கயவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சரவணின் குடும்பத்தினருக்கு, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். படுகொலையை நிகழ்த்திய வடமாநில குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். உயிரிழந்த சகோதரர் சரவணனுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என வேல்முருகன் கூறியுள்ளார்.