- Home
- இந்தியா
- Elephant Clash: யானைகள் மோதலில் சிக்கி சென்னை ஐடி பெண் பரிதாப பலி! சுற்றுலா இடத்தில் நேர்ந்த சோகம்!
Elephant Clash: யானைகள் மோதலில் சிக்கி சென்னை ஐடி பெண் பரிதாப பலி! சுற்றுலா இடத்தில் நேர்ந்த சோகம்!
Elephant Clash: கர்நாடக மாநிலம் குடகில் யானைகள் மோதலில் சிக்கி சென்னை ஐடி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யானைகள் மோதலில் சென்னை பெண் பலி
கர்நாடக மாநிலத்தில் இயற்கை அழகை ரசிக்க வந்த இடத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. குடகின் புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில், இரண்டு யானைகள் மோதிக்கொண்டதில் சென்னை பெண் சுற்றுலா பயணி ஒருவர் சிக்கி உயிரிழந்தார். 33 வயதான ஜின்னு மேத்யூ என்ற அந்தப் பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மதியம் சுமார் 12 மணியளவில், துபாரே முகாமில் யானைகளைக் குளிப்பாட்டும் நிகழ்வு நடந்தது.
அப்போது, 'மார்த்தாண்டா', 'கஞ்சன்' என்ற இரண்டு யானைகளை ஆற்றுக்குக் கொண்டு வந்தனர். பாகன் கௌஸ், மார்த்தாண்டா யானையை ஆற்றில் இறக்கியபோது, அது எதிர்பாராதவிதமாக கஞ்சன் யானை மீது மோதியதாகக் கூறப்படுகிறது. தன் மீது மார்த்தாண்டா மோதியதும், கஞ்சன் யானை கடும் கோபம் கொண்டது. உடனே அது மார்த்தாண்டாவைத் தாக்கப் பாய்ந்தது. இந்த திடீர் மோதலைப் பார்த்து அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓடினர்.

என்ன நடந்தது?
ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஜின்னு என்ற பெண், யானைகளின் சண்டைக்குள் சிக்கிக்கொண்டார். யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் நடந்ததும், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜின்னுவின் உடலை உடனடியாக குஷால்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மார்த்தாண்டா யானையின் பாகன் கௌஸ் மற்றும் கஞ்சன் யானையின் பாகன் விஜய், யானைகளைக் கட்டுப்படுத்தப் போராடினர். ஆனால், அதற்குள் விபரீதம் நடந்துவிட்டது.
துபாரே யானைகள் முகாமுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக, யானைகளைக் குளிப்பாட்டுவதை மிக அருகில் இருந்து பார்க்கவே பலரும் விரும்புகின்றனர். இதுபோன்ற சமயங்களில், யானைகளுக்கும் பயணிகளுக்கும் இடையே இருக்க வேண்டிய பாதுகாப்பு இடைவெளி குறித்த கேள்விகள் இப்போது எழுந்துள்ளன. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானைகள் முகாம் தற்காலிகமாக மூடல்
யானை தாக்கியதில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த ஜின்னு மேத்யூ ஐடி துறையில் பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி துபாரே யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்பட்டது. யானைகளை ஆற்றில் குளிப்பாட்டும் நிகழ்வின் போது சுற்றுலாப் பயணிகளை மிக அருகில் அனுமதிப்பது ஆபத்தானது என்பதால், பாதுகாப்பு விதிகளை மறுபரிசீலனை செய்ய வனத்துறை உத்தரவிட்டது.

