தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் மட்டும் ஜெயிக்கலனா அடுத்த நாளே அமைச்சர் பதவி ராஜினாமா.. மூர்த்தி ஆவேசம்!
கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என பத்திரபதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
Theni lok Sabha Constituency
தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணசாமி, திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், தங்க தமிழ்செல்வன் அதிமுகவிலிருந்து டிடிவி.தினகரனுடன் சென்று அங்கிருந்து திமுகவுக்கு வந்தவர். தினகரனின் வலதுகரமாகவும் அப்போது அறியப்பட்டவர்.
TTV Dhinakaran
தற்போது டிடிவி.தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் தென்மாவட்டங்களில் தேனி மக்களவை தொகுதி ஸ்டார் அந்தஸ்து தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திரபதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
Minister Moorthy
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி: தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். 40 தொகுதிகளையும் திமுக கூட்டணிதான் வெற்றிபெறும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியையும், மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜினமா செய்வேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
Thanga Tamil Selvan
மேலும் உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் அப்போது உழைத்ததால் நான் தற்போது அமைச்சராக பதவி உயர்ந்துள்ளேன். எனவே கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கூறியுள்ளார்.