- Home
- Sports
- Fifa World Cup
- FIFA World Cup: சும்மா பணமழைதான்! கால்பந்து உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு கோடி தெரியுமா?
FIFA World Cup: சும்மா பணமழைதான்! கால்பந்து உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு கோடி தெரியுமா?
FIFA World Cup Prize Money : வரலாற்றிலேயே மிகப்பெரிய கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு, FIFA மிகப்பெரிய பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இந்தப் பணம் நேரடியாக வீரர்களுக்குக் கிடைக்காது, அந்தந்த நாட்டு கால்பந்து சங்கங்களுக்கு வழங்கப்படும்.

FIFA World Cup Prize Money
வரலாறு காணாத பிரம்மாண்ட உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவுக்கு FIFA தயாராகி வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் பந்து உருளப் போகும் இந்தத் தொடரில், அணிகளுக்காக காத்திருக்கும் பரிசுத்தொகை எவ்வளவு என்று பார்ப்போமா? இந்த முறை கால்பந்து வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் களமிறங்குகின்றன. அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போட்டிகளும், பரிசுத்தொகையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மொத்தமாக, FIFA வழங்கும் பரிசுத்தொகை மட்டும் ரூ.6,238.42 கோடி.
பரிசுத்தொகை எவ்வளவு?
உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் மற்ற செலவுகளையும் சேர்த்தால், மொத்த மதிப்பு ரூ.7,400 கோடியைத் தாண்டும். இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.417.50 கோடி பரிசுத்தொகையாகக் கிடைக்கும். இது கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு கிடைத்ததை விட ரூ.76 கோடி அதிகம். இதுபோக, உலகக்கோப்பைக்குத் தயாராவதற்கான செலவுத் தொகையும் தனியாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு சுமார் ரூ.288 கோடியும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.254.675 கோடியும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.237 கோடியும் கிடைக்கும்.
எல்லா அணிகளுக்கும் பரிசு
குவார்ட்டர் ஃபைனலுக்கு வரும் அணிகளுக்கும் கை நிறைய பணம் காத்திருக்கிறது. குறைந்தபட்சம், உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ரூ.87.5 கோடி உறுதியாகக் கிடைக்கும். இதுவும் அணிகள் தயாராவதற்கான செலவுத்தொகை இல்லாமல் வழங்கப்படும் தனித்தொகை. கனடா, மெக்சிகோ, மற்றும் அமெரிக்காவில் நடக்கும் இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மூன்று நாடுகளில் இருந்து கிடைக்கும் ஸ்பான்சர்ஷிப் காரணமாக FIFA-வின் வருமானம் பெருமளவில் உயர்ந்துள்ளது.
பரிசுத்தொகை யாருக்கு கிடைக்கும்?
இதனால்தான், அணிகளுக்கான பரிசுத்தொகையையும் FIFA அதிகரித்துள்ளது. சரி, இந்தப் பணம் எல்லாம் வீரர்களுக்கு நேரடியாகக் கிடைக்குமா? என்றால், இல்லை என்பதுதான் பதில். FIFA இந்தப் பணத்தை வீரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தாது. மாறாக, ஒவ்வொரு நாட்டின் கால்பந்து சங்கங்களுக்குத்தான் இந்தப் பணம் வழங்கப்படும். இந்தத் தொகையில் இருந்து வீரர்களுக்கான போனஸ், பயிற்சியாளர் குழுவின் சம்பளம், பயணச் செலவுகள் மற்றும் உள்நாட்டு கால்பந்து வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு அந்தந்த சங்கங்கள் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்.

