முதல்வருக்கு அழைப்பு... பிரம்மாண்ட அரண்மனையில் கோலாகலம்... 3 நாளைக்கு களைகட்டப்போகும் பிரபல நடிகரின் திருமணம்!
ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான நிதின் - ஷாலினி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக வலம் வருபவர் நிதின். இவர் டோலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான சுதாகர் ரெட்டியின் மகன்.
சமீபத்தில் வெங்கு குடுமுலா இயக்கத்தில் நிதின் நடித்த பீஷ்மா என்ற காமெடி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.
தொடர் வெற்றிகளை ருசித்து வந்த நிதின் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி என்பவரை கரம் பிடிக்க முடிவு செய்தார். இருவீட்டாரும் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் சில சடங்குகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றன. அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலானது.
இதையடுத்து ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் துபாயில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த நடிகர் நிதின் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக பிரம்மாண்ட திருமணத்திற்காக போட்ட திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.
இதனிடையே ஐதராபாத்திலேயே சிம்பிளாக திருமணத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது
இன்று நிதின் - ஷாலினி இருவரும் தங்களது குடும்பத்தினர் முன்பு மோதிரம் மாத்தி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனைகளில் ஒன்றான தாஜ் ஃபலக்நுமா அரண்மனையில் நிதின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரம்மாண்ட அரண்மனையில் 3 நாட்களுக்கு கோலாகலமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் 26ம் தேதி காலை 8.30 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இந்த திருமணத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், வருன் தேஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு நிதின் நேரில் சென்று பத்திரிக்கை வைத்துள்ளார்.
இந்த இளம் ஜோடியின் திருமண கொண்டாட்டத்தில் ஏராளமான தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.