800 படத்திற்கு எதிராக எகிறும் கண்டனம்..! வாய் திறக்காத விஜய் சேதுபதி..! ஏன்..?
விஜய் சேதுபதி தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதற்கு, திரை பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய் சேதுபதி தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்.
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகியது. ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து போஸ்டர் வெளியாகி வைரலானது.
அதே நேரத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியானது. அதில் இந்த படத்திற்கு 800 என பெயர் வைத்த தகவலையும் பட குழுவினர் வெளிப்படுத்தி இருந்தனர்.
போஸ்டரில் விஜய் சேதுபதி பார்க்க அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே இருந்தார். இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி, கடின உடல் பயிற்சிகள் செய்து தன்னுடைய எடையை கணிசமாக குறைத்துள்ளார்.
இவர் இந்த படத்திற்காக எந்த அளவிற்கு சிரமப்பட்டுள்ளார் என்பது அவரது தோற்றத்தில் இருந்தே தெறித்தது.
விஜய்சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்றாலே அவருடைய ரசிகர்கள் செம்ம குஷியாகிவிடுவார்கள். ஆனால் இந்த முறையோ அப்படியே ஆப்போசிட்டா #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
காரணம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வந்த முதல் நாளில் இருந்தே சோசியல் மீடியா மூலமாக தமிழ் ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதிக்கு இந்த கோரிக்கை வைத்து வந்தனர். இயக்குனர் சீனு ராமசாமி, பாரதி ராஜா, சேரன், தாமரை, சீமான் போன்ற சில அரசியல் தலைவர்களும் இந்த படத்தை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என தங்களுடைய வேண்டுகோளை அவருக்கு வைத்து வருகிறார்கள்.
ஆனால் இதுவரை விஜய் சேதுபதி தரப்பில் இருந்து, இவ்வளவு எதிர்ப்புகள் எழுந்தும் எந்த பதிலும் வரவில்லை. தன்னுடைய ரசிகரின் ஆசைக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகி தமிழ் மக்களின் உணர்ச்சிகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
அதே நேரத்தில், இதுவரை விஜய் சேதுபதியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராதது ஏன்? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.