ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!
நேற்று காலை திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் ரஜினி டிஸ்சார்ஜ் ஆவது குறித்த முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. கடும் கட்டுப்பாடுகளுடன் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சிகிச்சையில் அவருக்கு முடிவு நெகட்டிவ் என வந்தது. இருப்பினும் ஐதராபாத்திலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
நேற்று காலை திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலைச் சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.
ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் சூப்பர் ஸ்டார் நலம் பெற வேண்டுமென சோசியல் மீடியாக்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறது. அதில், ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும். ரஜினிகாந்த் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதே போல் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்பதையும் தெரிவித்து இன்று காலை அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பயப்படும் வகையில் எதுவும் இல்லை, என்றும் ஒரு சில சோதனைகளுக்கு பின்னர் ரஜினிகாந்த் டிச்சார்ஜ் ஆவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பழனிச்சாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து, அவரிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது