விஜே சித்ரா தற்கொலை... போலீசாரிடம் ஹேமந்த் அளித்த அதிர்ச்சி தகவல்கள்...!
5வது நாளாக தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவியிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் சித்ராவின் கணவர் ஹேமந்த், உறவினர்கள், நண்பர்கள், சக நடிகர், நடிகைகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவை ஹேமந்த் தான் அடித்து கொன்றுவிட்டதாக அவருடைய தாயார் குற்றச்சாட்டி வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியானது.
இதையடுத்து சித்ராவின் மரண வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ள போலீசார். அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
5வது நாளாக தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவியிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஹேமந்த் சில அதிர்ச்சி தகவல்களை போலீசாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடைசியாக அவருடைய தாயார் உடன் தான் போனில் பேசினார் என்பதை ஏற்கனவே கண்டறிந்தனர். இந்நிலையில் சித்ரா, தனது தாயாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ஹேமந்தை திருமணம் செய்ய சித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அதை பிடிக்காத சித்ராவின் தாயார் ஹேம்நாத்தை பிரிந்து வந்து விடும் படி அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.