உஷாரான ‘லியோ’ விஜய்... வசமாக சிக்கிக்கொண்ட அஜித் - ‘ஏகே 62’ படத்துக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு?
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், அப்படத்திற்கு காத்திருக்கும் சிக்கல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது அஜித்தின் ஏகே 62 மற்றும் விஜய்யின் லியோ படங்களைப் பற்றிய அப்டேட்டுகள் தான். விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதமே தொடங்கப்பட்டு தற்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. பொதுவாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளை அப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னர் தான் வெளியிடுவார்கள்.
ஆனால் லியோ படக்குழு சற்று வித்தியாசமாக ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே, படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரங்கள், படத்தின் புரோமோ மற்றும் ரிலீஸ் தேதி என அப்டேட் மழை பொழிந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்களே போதும் என சொல்லும் அளவுக்கு அப்டேட்டுகளை வாரி வழங்கிவிட்டனர். மறுபுறம் அஜித்தின் ஏகே 62 படத்தின் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. அப்படத்தின் இயக்குனரே இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த அப்படத்தை தற்போது மகிழ் திருமேனி இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. அநேகமாக மார்ச் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது. விஜய்யின் லியோ படத்தைப் போல் அஜித்தின் ஏகே 62 படக்குழுவும் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு தான் படத்தின் வேலையை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சம்பள விஷயத்தில் ஷங்கரை நெருங்கும் லோகேஷ் கனகராஜ்... லியோ படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?
தீபாவளி பண்டிகைக்கு ஏகே 62 திரைப்படம் திரைக்கு வந்தால் அப்படத்திற்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் அந்த சமயத்தில் தான் கமலின் பிரம்மாண்ட படமான இந்தியன் 2 மற்றும் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் தயாராகி வரும் சூர்யா 42 ஆகிய படங்களையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இந்த இரண்டு பிரம்மாண்ட படங்களுடன் ஏகே 62-வும் போட்டி போட்டு ரிலீஸ் ஆனால் அப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த விஷயத்தில் விஜய்யின் லியோ திரைப்படம் உஷாராக தப்பித்துவிட்டது. அப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர உள்ளனர். தற்போதைய நிலவரப்படி அந்த சமயத்தில் வேறு எந்த பெரிய நடிகர்களின் படங்களும் ரிலீசாக வாய்ப்பில்லை என கூறப்படுவதால், அது லியோ படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. இதேநிலைமை நீடித்தால் லியோ மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நடிகர் பிரபாஸுடன்.. கிருத்தி சனோனுக்கு மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடக்கிறதா? உண்மையை உடைத்த நண்பர்கள்!