ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்... முதல்வரிடம் இருந்து வந்த அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி...!
விஜய் ரசிகர்கள் ஊர் முழுக்க ஓட்டிய போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான நிலையில், இப்படியொரு அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
பொங்கல் விருந்தாக விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும், சிம்புவியின் ஈஸ்வரனும் திரைக்கு வர உள்ளது. இதனால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்தால், கொரோனா காலத்தில் இழந்த வாழ்வாதாரத்தை மீட்கலாம் என தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கைவைத்து வந்தனர்.
இதனிடையே நடிகர் விஜய்யும் கடந்த மாதம் யாருக்கும் தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது தனது படத்திற்காக எவ்வித சலுகையும் கேட்காத அவர், தியேட்டர்களில் 100 சதவீத அனுமதிக்கு உத்தரவிட்டால் ஊழியர்கள், உரிமையாளர்களின் நலன் காக்கப்படும் என கோரிக்கை வைத்தார்.
விஜய்யிடம் நிச்சயம் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என உறுதியளித்த முதலமைச்சரும் கடந்த 4ம் தேதி அதிரடி அரசாணை ஒன்றை பிறப்பித்தார். அதில் தமிழகத்தில் உள்ள திரையரங்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பதாக உத்தரவு வெளியானது.
இதனால் குஷியான திரையுலகினரும், தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் முதல்வருக்கு தங்களுடைய கோடினா கோடி நன்றிகளை தெரிவித்தனர். அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தினரும் நன்றி முதல்வரே என விஜய் - எடப்பாடியாருக்கு கை கொடுப்பது போன்ற புகைப்படத்துடன் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டினர்.
இந்த போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த அதே சமயத்தில், 100 சதவீத இருக்கைக்கு எதிர்ப்பு வலுத்து வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் வரை வழக்கு தொடரப்பட்டது. பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவுப்படி ஜனவரி 11 ஆம் தேதி வரை தியேட்டர்கள் 50% ரசிகர்கள் அனுமதியுடன்தான் இயங்கவேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு முன்னதாக மத்திய அரசும் 100 சதவீத இருக்கைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற அறிவுறுத்தியிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்த தமிழக அரசு, மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தது. ஊர் முழுக்க நன்றி சொல்லி போஸ்டர் ஒட்டுனா எங்களை இப்படி கவுத்துவிட்டீங்களே? என கடும் சோகத்தில் இருக்கிறார்களாம் விஜய் ரசிகர்கள்.