விஜய் தேவரகொண்டாவின் கார் விபத்தில் சிக்கியது..! அவருக்கு என்ன ஆச்சு? பரபரப்பு தகவல்!
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவருக்கு என்ன ஆச்சு? என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று பிற்பகல் 3 மணியளவில் புட்டபர்த்தியிலிருந்து ஹைதராபாத்திற்கு தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
விஜய் தேவரகொண்டா கார் விபத்து
அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு பொலிரோ வாகனம் திடீரென வலதுபுறம் திரும்பியதால், விஜய் தேவரகொண்டாவின் கார் பொலிரோ வாகனம் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி கடும் சேதம் அடைந்தது. நல்ல வேளையாக இந்த விபத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும், காரில் இருந்த மற்ற இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா வேறு காரில் தனது பயணத்தை தொடர்ந்தார் என்று தெலங்கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது? விஜய் தேவரகொண்டா விளக்கம்
விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்துடன் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் ஆசிரமத்திற்குச் சென்று வந்த சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த விஜய் தேவரகொண்டா, ''ஆல் இஸ் வெல். எனது கார் விபத்தில் சிக்கியது. ஆனால் அனைவரும் நலமுடம் உள்ளோம்.
இப்போது தான் வலிமைக்கான உடற்பயிற்சி செய்து விட்டு வீட்டுக்கு வந்தேன். தலை லேசாக வலிக்கிறது. ஆனால் ஒரு பிரியாணியும் தூக்கமும் சரி செய்ய முடியாதது எதுவுமில்லை. அக்கறைவுடன் நலம் விசாரித்த உங்கள் அனைவருக்கும் அன்பும், நன்றியும். இந்த செய்தியால் உங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்க வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம்
சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் கார் விபத்தில் சிக்கியது அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.