சொகுசு காரில் ஜோராக சென்ற ரஜினிக்கு அபராதம்.... அமவுண்ட்டை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்...!
ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றது தொடர்பாக இரண்டாவது சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்த லம்போர்கினி காரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே ஓட்டிச்செல்வது போன்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. மாஸ்க் அணிந்த படி மாஸாக இருக்கும் தலைவரின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திக்குமுக்காடினர்.
கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோர் உள்ளனர். எனவே அங்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பொழுதை கழிப்பதோடு, வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு செல்ல ரஜினிகாந்த் E – Pass எடுத்தாரா? இல்லையா? என்ற சர்ச்சை உருவானது.
தற்போது ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் பெற்றே செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்று வந்ததாக சென்னை மாநகராட்சி இ-ப்பாஸ் ஒன்றை வெளியிட்டது.
அந்த இ-பாஸில் நேற்று ஒருநாள் மட்டுமே ரஜினிகாந்த் செல்லும் படியாக தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் கார் ஒட்டிச்சென்ற புகைப்படமோ கடந்த 21ம் தேதி வைரலானது.
இந்த குழப்பத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாததற்காக போக்குவரத்து காவல்துறையிடம் ரூ.100 அபராதம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 26ம் தேதி கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்ற போது, தாழம்பூர் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியவில்லை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.