1000 கோடி வசூல் தமிழ் சினிமாவுக்கு எட்டாக்கனியாக இருப்பது ஏன்? மணிரத்னம் விளக்கம்
தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்கள் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை எட்டிவிட்ட நிலையில், தமிழில் ஒரு படம் கூட அந்த மைல்கல்லை எட்டவில்லை.

Maniratnam About 1000 Crore Box Office
தமிழ் சினிமாவில் பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்தவர் மணிரத்னம். அவர் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் இயக்கிய மெளன ராகம், நாயகன், தளபதி போன்ற படங்கள் காலம் கடந்து கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக் படங்களாக உள்ளன. இந்த நிலையில், இவர் தற்போது சுமார் 38 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றி உள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.
மணிரத்னத்தின் தக் லைஃப்
தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தக் லைஃப் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்த நிலையில், தக் லைஃப் படத்தின் புரமோஷனுக்காக நீயா நானா கோபிநாத் நடத்திய நேர்காணலில் கலந்துகொண்டார் மணிரத்னம். அப்போது நிறைய சுவாரஸ்ய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதிலும் குறிப்பாக தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்கள் 1000 கோடி வசூலை எட்டிவிட்ட நிலையில், ஏன் தமிழ் சினிமா 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டவில்லை என்கிற கேள்விக்கு மணிரத்னம் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
மணிரத்னம் அளித்த நச் பதில்
இதற்கு மணிரத்னம் கூறியதாவது : “நல்ல படங்கள் கொடுப்பது முக்கியமா அல்லது பாக்ஸ் ஆபிஸ் வசூல் முக்கியமா? முன்னர், மக்கள் படத்தின் தரத்தை பற்றி யோசித்தார்கள். ஆனால் தற்போது படங்களின் கலெக்ஷனை நோக்கி திரும்பி இருக்கிறார்கள். இந்த டிரெண்ட் படங்களின் தரத்தை குறைத்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன். நான் ஆயிரம் கோடி வசூலிக்க வேண்டும் என்கிற சிந்தனையில் படத்தை எடுக்க மாட்டேன்” என மணிரத்னம் கூறி உள்ளார்.