“நான் தப்பான தொழில் செய்யுறனா”... வனிதா மீது போலீசில் புகார் அளித்த சூர்யா தேவி...!
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட படு சூடாக போய்க்கொண்டிருக்கும் வனிதா மூன்றாவது திருமண விவகாரத்தில் அடுத்த திருப்புமுனை வந்துவிட்டது. என்னைப் பற்றி அசிங்கமாக விமர்சிக்கிறார் என சூர்யா தேவி என்ற பெண் மீது வனிதா புகார் அளித்திருந்தார். அதில் அவர் கஞ்சா விற்பதாகவும் கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா தேவி தன் மீது அவதூறு பரப்புவதாக நடிகை வனிதா மீது புகார் அளித்துள்ளார்.
பிக்பாஸ் புகழ் வனிதாவின் 3வது கல்யாணத்திற்கான எதிர்ப்பு மற்றும் ஆதரவு பற்றி சோசியல் மீடியா முழுக்க ஒரே பேச்சாக உள்ளது. 40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதும், பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை கரம் பிடித்ததும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பீட்டர் பால் சமாச்சாரம் வெளியே வராத வரை வனிதாவின் திருமணத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு வந்ததாக பீட்டர் பால் மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு வனிதா மீதான எதிர்ப்பு அலைகளை அதிகரிக்க வைத்துள்ளது.
இதையடுத்து வனிதாவை சூர்யா தேவி என்ற பெண் தரக்குறைவாக விமர்சித்து யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்தார். அதேபோல் தயாரிப்பாளர் ரவீந்தரும் வனிதா - பீட்டர் பால் கல்யாணம் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.
இதனால் பொறுத்து, பொறுத்து பார்த்த வனிதா பொங்கியெழுந்தார். தனது வழக்கறிஞருடன் சென்று, இருவர் மீதும் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அத்தோடு நிற்காமல் செய்தியாளர்களை சந்தித்த வனிதா மற்றும் அவருடைய வழக்கறிஞர், சூர்யா தேவி சென்னையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்று வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.
அதுமட்டுனின்றி பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் நாஞ்சில் விஜயன் என்பவருக்கும் சூர்யா தேவிக்கும் தொடர்பு இருப்பதாகவும், இருவரும் கொஞ்சிக்கொள்ளும் வீடியோ ஒன்றையும் வழக்கறிஞர் ஸ்ரீதர் வெளியிட்டார்.
இதனால் கொந்தளித்த சூர்யா தேவி வனிதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் வனிதா அவதூறான வார்த்தைகளை பேசி, தனது மனதை புண்படுத்தியிருப்பதாகவும் தன்னைப் பற்றி அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.