இரட்டை குழந்தைகளின் முகத்தை முதல் முறையாக காட்டிய கவிஞர் சினேகன்.! புகைப்படங்கள் இதோ
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் நடிகருமான கவிஞர் சினேகன், சமீபத்தில் பிறந்த தன்னுடைய இரட்டைக் குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டியுள்ளார். மேலும் தனது மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கவிஞர் சினேகனின் திரைப்பயணம்
தமிழ் திரையுலகிற்கு பல நல்ல பாடல்களை தந்தவர் சினேகன். கவிஞர், பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி என பன்முகத் திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 1995-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை துவங்கிய அவர், 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். 2017-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் ஒன்றில் பங்கெடுத்த அவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
சினேகன் - கனிகா திருமணம்
சினேகன் கடந்த 2021-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை கனிகாவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்ததால் இவர்களின் திருமணம் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது. விமர்சனங்களை புறந்தள்ளி சினேகன் கனிகா தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தங்களது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.
இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூடிய சினேகன்
இந்த நிலையில் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது. இத்தனை நாட்களாக குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சினேகன், தற்போது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, “அன்பிற்கினிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும் வணக்கம். எங்களது இரட்டை மகள்கள் காதல் கனிகா சினேகன், கவிதை கனிகா சினேகன் இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு, எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
சினேகன் - கனிகாவை வாழ்த்தும் ரசிகர்கள்
சினேகன் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களும், லைக்குகளும் குவிந்து வருகிறது.