கண்ணீர் துளிகளால் நன்றி... குழந்தை பிறந்த தகவலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்கிற மகள் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்து, தன்னுடைய திறமையால் தொகுப்பாளர், துணை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர், பாடகராகவும் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். பல பிரபலங்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்து, அதிக சம்பளம் பெரும் நடிகராக உள்ளார்.
இவருக்கு இவருடைய மாமன் மகள், ஆர்த்தியுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு ஆராதனா என்கிற மகளும் உள்ளார். சிவகார்த்திகேயன் மகளும், 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த பிள்ளை' என்கிற பாடல் பாடியதன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலம்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதல் சட்ட மன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த போதே, ஆர்த்தி கர்ப்பமாக உள்ளதாக அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், இதுகுறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து தற்போது தனக்கு மகன் பிறந்த தகவலை மிகவும் உணவு பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார். என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.அம்மாவும் குழந்தையும் நலம் என்று தெரிவித்துள்ளார்.
குட்டி சிவகார்த்திகேயன் பிறந்த தகவலை அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள் . மேலும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.