1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க வந்த ஆஃபர் - ஏற்பாரா விக்ரம்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சீயான் விக்ரம், தற்போது ஆயிரம் கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

Vikram in 1000 Crore Budget Movie
ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுடன் இணையும் இப்படம் தற்காலிகமாக 'SSMB29' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, இயக்குனர் ராஜமௌலி மற்றொரு மாஸ் நடிகரை படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ராஜமெளலி படத்தில் விக்ரம்
அவர் வேறுயாருமில்லை பிரபல தமிழ் நடிகரான விக்ரம் தான். அவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தான் இயக்குனர் ராஜமௌலி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஷ் பாபுவின் மாஸ் இமேஜுக்கு நிகரான ஒரு கோலிவுட் நடிகரை தேர்வு செய்ய விரும்பிய ராஜமௌலி, விக்ரம் அதற்கு கச்சிதமாக பொருந்துவார் என கருதி உள்ளாராம். விக்ரமுக்கு தெலுங்கில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது. பல மொழிகளில் வெளியிடப்படவுள்ள இந்த படத்திற்கு விக்ரம் சரியான தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஷ் பாபு உடன் கூட்டணி அமைக்கும் விக்ரம்
இந்த கூட்டணி உறுதியானால், மகேஷ் பாபுவும் விக்ரமும் முதல் முறையாக திரையில் இணையும் படமாக இது இருக்கும். தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சம்பள விவகாரம் என அனைத்தும் ஒத்துப்போனால் விக்ரம் இதில் கன்பார்ம் நடிப்பார் என கூறப்படுகிறது. SSMB29 தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இப்படத்தை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக பிரம்மாண்டமாக படமாக்கி வருகிறார் ராஜமெளலி.
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SSMB29
SSMB29 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒடிசாவில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை படக்குழு ஆப்ரிக்காவில் நடத்த உள்ளது. இப்படத்தை சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் விக்ரம் இணைந்தால், அது கோலிவுட்டிலும் அப்படத்தினை அதிகப்படியான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு அவரை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.