‘ஜெய் பீம்’ ரியல் செங்கேணிக்கு வீடு கட்டித் தரப்போவதில்லை.... திடீரென முடிவை மாற்றியது ஏன்? - லாரன்ஸ் விளக்கம்
‘ஜெய் பீம்’ (Jai Bhim) படம் வெளியான பின் ரியல் செங்கேணியான பார்வதி அம்மாளுக்கு பலரும் உதவிக் கரம் நீட்டினர். குறிப்பாக ராகவா லாரன்ஸ் அவரை நேரில் சந்தித்து கான்கிரீட் வீடு கட்டித் தருவதாக அறிவித்திருந்தார்.
உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் எடுக்கப்பட்ட 'ஜெய் பீம்' திரைப்படமும், கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யா (Suriya) நடித்தது மட்டும் இன்றி, தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்தும் இருந்தார்.
surya and parvathy jai bhim
மேலும் இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோமோல், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் தா.செ.ஞானவேல் திரைக்கதை எழுதி இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாள்) நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
Ragava lawrence and jaibhim parvathy
இப்படம் வெளியான பின் ரியல் செங்கேணியான பார்வதி அம்மாளுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டினர். குறிப்பாக ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) அவரை நேரில் சந்தித்து கான்கிரீட் வீடு கட்டித் தருவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அந்த முடிவை மாற்றியுள்ளார் லாரன்ஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன்.
பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர்.
அதன்படி சில நாட்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்த நிலையில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
பார்வதி அம்மாவின் இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன்.
Jai Bhim movie
பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம்” என லாரன்ஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.