சவால்விட்ட எம்ஜிஆர் ரசிகர்கள்... ஈகோ உச்சிக்கு ஏறி வாலி கொடுத்த அடிபொலி ஹிட் சாங்..!
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் டீக்கடையில் அமர்ந்து பேசும்போது கண்ணதாசனை தவிர தலைவருக்கு யாரும் அருமையான பாடல்கள் கொடுக்க முடியாது என கூறி இருக்கின்றனர். அவர்களுக்கு பாடலால் பதிலடி கொடுத்திருக்கிறார் வாலி.

Lyricist Vaali Song Secret
தமிழ் சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 1966-ம் ஆண்டு வெளியான அன்பே வா திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது. எம்.ஜி.ஆர், சரோஜா தேவிi, நாகேஷ், மனோரமா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்தை திரிலோகச்சந்தர் இயக்கினார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்; இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் முழுவதும் கவிஞர் வாலி தான் எழுதியிருந்தார்.
அன்பே வா பட பாடல் ரகசியம்
இந்த படம், AVM தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் கலர் படம் என்பதாலும், அவர் வழக்கமான மாஸ் ஸ்டைலிலிருந்து விலகி முழுக்க காதல் கதாபாத்திரத்தில் நடித்ததாலும், வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை முறியடிக்காமல், படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி, காலத்தை கடந்தும் கேட்கப்படும் வகையில் மாறின. அதில் குறிப்பிடத்தக்க பாடல் என்றால் அது “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியே தான்…” என்ற பாடல். இந்த பாடல் உருவான விதமே மிகவும் சுவாரஸ்யமானது.
வாலியின் ஈகோவை சீண்டிய ரசிகர்கள்
ஒரு நாள், வாலி ஒரு டீக்கடையில் இருந்தபோது பணத்தோட்டம் படத்தின் “பேசுவது கிளியா” பாடல் ஒலித்துக் கொண்டிருந்ததாம். அப்போது சில ரசிகர்கள், “தலைவருக்கு காலத்தால் அழியாத பாடல் எழுத முடியும் என்றால் அது கவிஞர் கண்ணதாசனால் மட்டும் தான் முடியும்” என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த வார்த்தைகள் வாலியின் ஈகோவை சீண்டின. “நமக்கு முடியாதா?” என்ற எண்ணத்துடன் அவர் நேராக கம்போசிங் செஷனுக்கு சென்றார். அங்கு சில நிமிடங்கள் ஆழ்ந்து யோசித்தபின், திடீரென மனதில் தோன்றிய வரியே “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியே தான் நல்ல அழகி என்பேன்…” என்பதாகும். அதுவே பின்னர் அந்த காலத்தையே கடந்த ஹிட் பாடலாக மாறியது.
வாலி பாடல் ரகசியம்
பாடல் கம்போசிங் முடிந்து அதை கேட்ட எம்.ஜி.ஆர் மிகவும் உற்சாகமடைந்து, “இந்த வரிகளை எழுதியவர் யார்? அவரை நேரில் பார்க்க வேண்டும்” என்று கேட்டாராம். வாலியை சந்தித்ததும் அவர் எழுதிய வரிகளை பாராட்டி, மகிழ்ச்சியில் அவருக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. வாலியை எப்போதும் அன்பாக “ஆண்டவர்” என்று அழைத்த எம்.ஜி.ஆரின் அந்த பாராட்டு, அந்த பாடலின் சிறப்பை இன்னும் உயர்த்தியது. இதன் பின்னர் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இசையமைப்பாளராக உருவெடுத்தார் வாலி.
வாலியின் ஆசை
வாலி சினிமாவில் அறிமுகமான புதிதில் அவருக்கு ஏவிஎம் நிறுவனத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது. அந்த கனவு என்றாவது ஒருநாள் நிறைவேறாதா என்கிற ஆசையில் இருந்தார் வாலி. ஏனெனில் ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் பாடங்களில் கண்ணதாசன் தான் முழுக்க முழுக்க பாடல்களை எழுதுவார். அப்படி சர்வர் சுந்தரம் பட கம்போசிங்கின்போது வாலி வேறு ஒரு படத்திற்காக எழுதிய பாடலை கேட்டதும் ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிடித்துப் போக, அவர் உடனே வாலியை அழைத்து ஒரு பாடலை எழுத சொன்னார். அப்படி ஏவிஎம் நிறுவனத்துக்காக வாலி முதன்முதலில் எழுதிய பாடல் தான் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்கிற பாடல். அப்பாடலும் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

