நான் கறவ மாடா; வில்லங்க வரிகளால் டென்ஷன் ஆன ஊர்வசியை பாடல் மூலம் கூல் டவுன் பண்ணிய வாலி!
பாடலாசிரியர் வாலி எழுதிய கறவ மாடு மூணு பாடல் வரிகளால் டென்ஷன் ஆன நடிகை ஊர்வசியை கூல் டவுன் பண்ண வாலி எழுதிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி பார்க்கலாம்.

Secret Behind Take it Easy Oorvasi song
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் மகளிர் மட்டும். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இப்படத்தில் ஊர்வசி, ரேவதி, ரோகிணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நாசர் ஹீரோவாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதி இருந்தார். அதில் இடம்பெற்ற ‘கறவ மாடு மூணு; காளை மாடு ஒன்னு’ என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.
வாலியின் வரிகளுக்கு ஊர்வசி எதிர்ப்பு
கவிஞர் வாலி இந்த பாடலில் கறவ மாடு மூணு என நடிகைகள் ஊர்வசி, ரேவதி, ரோகிணி ஆகியோரை தான் குறிப்பிட்டு எழுதியிருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த பாடல் காட்சி படமாக்கும் பொழுது பாடல் வரிகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை ஊர்வசி அது எப்படி இந்த மாதிரி வரிகளை வாலி எழுதியிருக்கிறார். அதற்கெல்லாம் நாம் வாயசைத்து நடித்தால், அதை நாம் ஏற்றுக்கொண்டது போல் ஆகிடும். அது நல்லா இருக்காது. அதனால் நான் அப்பாடல் வரிகளை பாடி நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம் ஊர்வசி.
ஊர்வசிக்கு விளக்கம் அளித்த வாலி
உடனே இயக்குனர் சிங்கீதம் சீனிவாசன் அதற்கு விளக்கம் கொடுத்தும்; அதையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டாராம் ஊர்வசி. அவரைப் போல் நடிகைகள் ரேவதி மற்றும் ரோகிணியும் அந்தப் பாடலில் நடிக்க மறுத்ததால் விஷயம் வாலி காதுக்கு சென்றிருக்கிறது. உடனே யார் கேட்டது என வாலி கேட்க, ஊர்வசி என சொல்லி இருக்கிறார்கள். ஏன் ஊர்வசிக்கு இந்த மாதிரி விபரீதமான எண்ணம் வருது. அந்த வரிகளுக்கு இதுதான் அர்த்தம் என வாலி விவரமாக எடுத்து சொல்லி; டேக் இட் ஈஸி ஊர்வசினு சொன்னாராம். அதன்பின்னரே அந்த பாடல் காட்சியில் நடித்தாராம் நடிகை ஊர்வசி.
ஊர்வசிக்காக வாலி எழுதிய பாடல்
இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் கழித்து டேக் இட் ஈஸி ஊர்வசி என்கிற பாடல் வந்திருக்கிறது. ஒருநாள் ஊர்வசியிடம் உங்கள் பெயரில் ஒரு பாட்டு வந்திருக்கு கேட்டீங்களானு கேட்டிருக்கிறார்கள். உடனே அந்த பாடலைக் கேட்ட ஊர்வசி, வாலிக்கு உடனடியாக போன் போட்டாராம். இந்தப் பாட்டு யார நினைச்சு எழுதுனீங்க என கேட்க, அதற்கு அவரோ உன்னை நினைச்சு தான் எழுதுனேன் என கூலாக ரிப்ளை கொடுத்திருக்கிறார். மேலும் அதில் ஊசி போல உடம்பு இருந்தா என்கிற வரியை கவனிச்சியா, அது நீ உடல் எடை கூடி வருவதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என தன் பாணியில் ரிப்ளை கொடுத்திருக்கிறார் வாலி.