தலைவருடன் நடிக்க தனி விமானத்தில் பறந்த நயன்தாரா... கிழிந்த பேண்ட்,கூலிங் கிளாஸுடன் கெத்தாக லேடி சூப்பர் ஸ்டார்
கிழிந்த பேண்ட், கண்ணில் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் உடன் மிடுக்காக நடந்து செல்லும் நயனின் போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
7 மாத இடைவெளிக்குப் பிறகு திரையுலகம் இயக்கம் ஆரம்பித்தாலும் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் படப்பிடிப்பில் பங்கேற்பதில் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் அண்ணாத்த பட ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிசம்பர் 15ம் தேதி முதல் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படப்பை நடத்துவதற்கான செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து சற்று நேரத்திற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத்திற்கு தனி விமானம் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார்.
அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக வெள்ளை ஜிப்பாவில், முகக்கவசத்துடன் சும்மா ஸ்டைலாக புறப்பட்டுச் சென்ற ரஜினியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இதேசமயத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் தனி விமானம் மூலமாக ஐதராபாத் சென்றடைந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது.
கிழிந்த பேண்ட், கண்ணில் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் உடன் மிடுக்காக நடந்து செல்லும் நயனின் போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இந்த படத்தில் முதன் முறையாக நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ரஜினிக்கு தங்கையாக நடிப்பதாக கூறப்படும் கீர்த்தி சுரேஷும் இந்த படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.