ஆசன வாயில் லத்தியை சொருகி... சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக கொந்தளித்த திரைப்பிரபலங்கள்...!
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னீஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆசன வாயில் லத்தியை விட்டு, கொடுமையான சித்ரவதைகளை எல்லாம் செய்து, அவர்களை ரத்தம் சொட்ட, சொட்ட போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக திரைப்பிரபலங்கள் பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
'எந்தவித தாமதமும் இன்றி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைப்பதை நாம் காண முடியுமா? குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே'' என நடிகை குஷ்பு கொந்தளித்துள்ளார்.
சட்டத்தை விட உயர்ந்தவர் எவரும் இல்லை.மனிதத் தன்மையற்றை இந்த செயலுக்கு நீதி வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் பயங்கரமானது; இது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத மனிதாபிமானமற்ற செயல். அவர்களுக்கான நீதி தாமதமானால் அது அநீதியாகும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை... நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுகொள்ளும் என்பதே வரலாறு... இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீதான மிருகத்தனம் மிக்க செயலை கேட்டு அதிர்ந்து போனேன். குற்றவாளிகள் தப்பிக்க கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கிணங்க நீதி கிடைக்க வேண்டும்' என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
நடிகர் சாந்தனு, இதை மறைக்க வேறு செய்திகள் இருக்கும்... உருவாக்கப்படும்...ஆனால்... ஒருமுறை உருவாக்கப்பட்ட கரும்புள்ளி எப்போதும் கரும்புள்ளியாகவே இருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் காவல்துறையினரின் நடத்தையைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்; ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் குடும்பத்திற்கு நீதி வேண்டும். இந்த சம்பவத்தை வைத்து காவல்துறையையும் குறை கூற முடியாது. ஆனால் இந்த இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என நடிகை வரலட்சுமி அரசுக்கு அதிரடி கோரிக்கை வைத்துள்ளார் .
சில மனிதர்கள் வைரஸை விட மிக ஆபத்தானவர்களாக இருக்கின்றனர் என சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் கெளதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்பும் நேர்மையான எந்த காவல்துறையினருக்கும் உரிய செயல் இது அல்ல. காவலர் சீருடையில் இருக்கும் காட்டுமிராண்டித்தனம் மற்றும் வக்கிர எண்ணம் கொண்ட சிலருடைய வேலை தான் இது” என பதிவிட்டுள்ளார்.
ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸுக்கு நடந்த கொடூரத்தை கேள்விப்பட்டு பதறிப்போனேன் அவர்கள் அனுபவித்த சித்ரவதைகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த இரக்கமற்ற செயலுக்கு எதிராக நாம் அனைவரும் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும்; அவர்கள் இருவரும் இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாயிட்கள் என இசையமைப்பாளர் இமான் பதிவிட்டுள்ளார்.
''பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே, நீங்கள் தான் மக்களின் அரசா?'' என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.