“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட நடிகைக்கு கல்யாணம்?... காதலரை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்...!
தெலுங்கில் தனக்கான இடத்தை பதித்துவிட்டு தமிழகத்தை மையமிட்டிருக்கும் இளம் புயல் நடிகை ரிது வர்மா. கொரோனா லாக்டவுனுக்கு முன்பு ரிது வர்மா, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தமிழில் ஒரே படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரிது வர்மாவிற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் என்ன சொல்லியிருக்கிறார் என பார்க்கலாம் வாங்க...
டோலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்து நடிகைகளில் ரிது வர்மாவும் ஒருவர். கல்லூரி படிப்பை முடித்த கையோடு “அனுகோகுண்டா” என்ற குறும்படத்தில் நடித்தார். அந்த குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, அதன் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார்.
“பிரேம இஷ்க் காதல்”, “எவடே சுப்ரமணியன்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
“பெல்லி சுப்புலு” என்ற படம் மூலம் ரிது வர்மாவிற்கு அடித்தது ஜாக்பாட். அந்த படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்த ரிது வர்மா, 2016ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதையும் பெற்றார்.
அதில் ரிது வர்மாவின் நடிப்பு பிடித்து போக விக்ரம் நடிப்பில் உருவாகவிருந்த “துருவ நட்சத்திரம்” படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் கவுதம் மேனன்.
முதல் படமே டாப் ஸ்டார் மற்றும் இயக்குநரின் காம்பினேஷனில் என்பதால் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என காத்திருந்தார் ரிது வர்மா. ஆனால் அந்த படம் இப்போதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார்.
ரக்ஷன், நிரஞ்சனி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் சூப்பர் ஹிட்டடித்தது.
தனது துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கவைக்க முடியாமல் போனதால் ரிது வர்மாவை “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் நடிக்க வைக்க சிபாரிசு செய்ததே இயக்குநர் கவுதம் மேனன் தான் என்று கூறப்படுகிறது.
பளபளக்கும் அழகும், குறும்பும் சிரிப்பும் முதல் படத்திலேயே ரிது வர்மாவை ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்க வைத்தது. தற்போது தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ள ரிதுவிற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் திருமணம் குறித்த கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்துள்ள ரிது வர்மா, தன்னுடைய பெற்றோர் தனக்கு திருமணம் செய்ய காத்திருப்பதாகவும், ஆனால் தான் அதற்கு இன்னும் நேரம் இருப்பதாக ஃபீல் செய்வதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, தனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்துகொள்வேன் என்றும், காதல் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் மனம் திறந்து பதிலளித்துள்ளார் ரிது வர்மா.