விஜய் மேல்முறையீடு செய்ய இது தான் காரணம்..? வரிக்காக அல்ல வழக்கறிஞர் வெளியிட்ட தகவல்!
சொகுசு கார் விவகாரம் குறித்த தீர்ப்பு குறித்து, நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஏன் இந்த மேல் முறையீடு செய்யப்படுகிறது... என்பது குறித்து தளபதி விஜய்யின் வழக்கறிஞர் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’’என கண்டனம் தெரிவித்தார்.
மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஒரு லட்சம் அபராத தொகையை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
நடிகர் விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூற ஆரம்பித்தனர். வரி விலக்கு கேட்ட விஜய்யை வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக சிலர் சோசியல் மீடியாக்களில் கிளப்பிவிட்டனர்.
கடந்த சில நாட்களாகவே விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்து ஊடகங்கள், சோசியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் சொகுசு கார் வரி விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
இதுகுறித்து விஜய்யின் வழக்கறிஞர் கூறியுள்ளதாவது... "வரி கட்ட கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை. வரிவிதிப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசின் அணுகுமுறையும் முரண்பட்டதாக இருந்ததால் இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போதே நுழைவு வரி கட்டித்தான் ஆகவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்திருந்தால் எந்த ஆட்சேபனையும் இன்றி விஜய் அவர்கள் வரி கட்டி இருப்பார்.
சமூகத்தில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி வரி விதிப்பில் இருந்து யாரும் விலகி ஓட வெளியேற முடியாது, அது விஜய் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அபராதம் விதித்துள்ளார். தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
இந்த மேல்முறையீடு கூட வரி கட்ட கூடாது என்பதற்காகவோ அல்லது அபராதம் செலுத்த கூடாது என்பதற்காகவும் கிடையாது. ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாகவே. இவ்வளவு காரசாரமான தமது கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்பதுதான் எங்கள் வாதம். அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.