- Home
- Cinema
- துபாயில் புது வீடு வாங்கி செட்டில் ஆகப்போகிறாரா சிம்பு? காட்டுத்தீ போல் பரவும் தகவல் - உண்மை என்ன?
துபாயில் புது வீடு வாங்கி செட்டில் ஆகப்போகிறாரா சிம்பு? காட்டுத்தீ போல் பரவும் தகவல் - உண்மை என்ன?
நடிகர் சிம்பு துபாயில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை சொந்தமாக வாங்கி அங்கு செட்டில் ஆக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Is Simbu Buy New Home in Dubai?
சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் திரைப்படம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய அப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார் சிம்பு. தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சிம்பு. அவரின் அடுத்த பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
சிம்புவின் அடுத்த படம்
நடிகர் சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். அப்படம் வடசென்னை யூனிவர்ஸில் உருவாகிறது. இதனால் அதில் சிம்பு உடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். அப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. அதில் லுங்கி அணிந்தபடி பக்கா வட சென்னை பையனாகவே காட்சியளித்தார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங்கை திடீரென தள்ளி வைத்தனர்.
தாமதம் ஆகும் எஸ்.டி.ஆர் 49
சிம்புவின் 49வது படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தான் தொடங்க உள்ளது. அப்படத்தின் சம்பள விஷயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் ஷூட்டிங் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி எஸ்.டி.ஆர் 49 படத்தின் புரோமோ வெளியிடப்பட உள்ளது. அதில் என்ன ஸ்பெஷல் என்றால், அந்த புரோமோவை ரஜினிகாந்தின் கூலி பட இடைவெளியின் போது திரையிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நடிகர் சிம்பு பற்றிய மற்றொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
துபாயில் வீடு வாங்கினாரா சிம்பு?
அதன்படி நடிகர் சிம்பு துபாயில் சொந்தமாக ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கியதாகவும். அதன் மதிப்பு ரூ.18 கோடி எனவும் தகவல் பரவி வந்தது. மேலும் கல்யாணம் ஆன பின்னர் சிம்பு துபாயில் செட்டில் ஆகப்போகிறார் என்றெல்லாம் பேச்சு அடிபட தொடங்கியது. ஆனால் சிம்பு தரப்பு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர் துபாயில் வீடு வாங்கியதாக பரவும் தகவல் துளியும் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளனர். அவர் பட வேலை தொடர்பாக அடிக்கடி துபாய் சென்று வருவதால் அவரைப் பற்றி இதுபோன்ற தகவல் பரவி இருக்கும் என கூறப்படுகிறது.