STR 49 பட ஸ்டோரி என்ன? சிம்பு உடன் தனுஷும் நடிக்கிறாரா? உண்மையை போட்டுடைத்த வெற்றிமாறன்
சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 படத்தில் தனுஷும் இருக்கிறாரா என்கிற தகவலை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

STR 49 Movie Story
இயக்குனர் வெற்றிமாறன் முதன்முறையாக சிம்பு உடன் கூட்டணி அமைத்துள்ள படம் STR 49. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் புரோமோ இம்மாத இறுதியில் வெளிவர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கும் இம்மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், STR 49 படத்தை பற்றி பல்வேறு அப்டேட்டுகளை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். வடசென்னை யூனிவர்ஸில் இப்படம் உருவாவதால் வடசென்னை படத்தில் நடித்த ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், அமீர் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.டி.ஆர் 49 பட கதை என்ன?
வடசென்னை படமே முதலில் சிம்புவுக்காக எழுதப்பட்டது தான் என கூறியுள்ள வெற்றிமாறன், பின்னர் அதில் தனுஷ் வந்ததால், அவருக்காக ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு அப்படம் எடுக்கப்பட்டதாகவும், தற்போது சிம்புவுக்கு எழுதப்பட்ட ஒரிஜினல் கதையுடன் எஸ்.டி.ஆர் 49 பட பணிகள் ஆரம்பமாகி இருப்பதாக கூறி உள்ள அவர், இப்படமும் வட சென்னை படம் உருவான காலகட்டத்தில் தான் உருவாவதாக கூறி இருக்கிறார். ஒரே யூனிவர்ஸ் என்பதால் வடசென்னை படத்தில் நடித்த ஏராளமானோர் இப்படத்திலும் இருப்பார்கள் ஆனால் தனுஷ் இந்த படத்தில் இல்லை என்று வெற்றிமாறன் கூறி உள்ளார்.
வட சென்னை 2 எப்போது?
சிம்புவின் STR 49 படத்தை முடித்ததும் வட சென்னை இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக கூறி இருக்கும் வெற்றிமாறன், அது எப்போது உருவாகும் என்பதை தன்னால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்திருக்கிறார். வட சென்னை படம் ரிலீஸ் ஆன போதே, அதன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கையும் துவங்க திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் தயாரிப்பாளர் தாணு தான் தனக்கு பிரஷ் ஆன ஸ்கிரிப்ட் வேண்டும் என கேட்க, அதன் காரணத்தால் தான் அந்த சமயத்தில் வட சென்னை 2 படத்திற்கு பதிலாக அசுரன் படத்தை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார் வெற்றிமாறன்.
தயாரிப்பு நிறுவனத்தை மூடிய வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். அதன்மூலம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வந்த அவர், நேற்று பேட் கேர்ள் என்கிற பட விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுவதாக அறிவித்தார். தன்னுடைய தயாரிப்பில் வெளிவரும் கடைசி படம் இந்த பேட் கேர்ள் தான் என அவர் கூறினார். நிறைய சவால்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறார் வெற்றிமாறன்.