மீண்டும் திரையில் ஜோடி சேரப் போகும் சூர்யா - ஜோதிகா... சூப்பர் கதையை தயார் செய்து வைத்திருக்கும் இயக்குநர்!!
தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் ஓட்டுமொத்த கோலிவுட்டே கண் வைக்கும் அளவிற்கு சூப்பர் ஜோடியாக வலம் வருவது நம்ம சூர்யா - ஜோதிகா தான்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதன் முறையாக சூர்யா - ஜோதிகா ஜோடி ஒன்றிணைந்து நடித்தது. முதல் படத்திலேயே அந்த இளம் ஜோடி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
முதல் படத்தில் ப்ரெண்ட்ஸ்!!.. என கைகுலுக்கி கொண்ட இருவரும். அதன் பின்னர் ஒருவரைப் பற்றி ஒருவர் நிறைய பேசி பழக ஆரம்பித்தனர். அதன் விளைவு காதல் வளர ஆரம்பித்தது.
2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்த காதல் ஜோடி சூர்யா- ஜோதிகா திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இந்த தம்பதிக்கு 2007ம் ஆண்டு தியா என்ற பெண் குழந்தையும், 2010ம் ஆண்டு தேவ் என்ற மகனும் பிறந்தனர்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா 2015ம் ஆண்டு 36 வயதினிலே படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ரசிகர்களின் மனதை மீண்டும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தார் ‘ஜோ’
அதன் பின்னர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
தற்போது சூர்யா, ஜோதிகா இருவரும் தனித்தனியாக நடித்து வந்தாலும் இருவரையும் மீண்டும் ஜோடியாக ஆன் ஸ்கிரீனில் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களுக்கு உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு சில்லுக்கருப்பட்டி என்ற வித்தியாசமான வெற்றிப்படத்தை கொடுத்த ஹலிதா ஷமீம் ஒரு நல்ல செய்தியை சொல்லி ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.
அதாவது ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஹலிதா, சூர்யா - ஜோதிகா ஜோடியை மீண்டும் திரையில் கொண்டு வர நீங்கள் நல்ல கதையை தயார் செய்ய வேண்டும் என கேட்க, சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு ஏற்றார் போல் ஸ்கிரிப்ட் ரெடி செய்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்