முடியவே முடியாது... மூணு கோடி எக்ஸ்ட்ரா வேணும்... கறார் காட்டும் பிரபல நடிகை...!
படம் ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்துவது என்பது பிரபலங்கள் செய்யும் வழக்கமான செயல் தான் என்றாலும் பிரபல நடிகையின் தடாலடி சம்பள உயர்வு பல தயாரிப்பாளர்களை பயமுறுத்த ஆரம்பித்துள்ளதாக செய்தி.
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலமாக தமிழில் காலடி எடுத்து வைத்த டாப்ஸி வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
இந்தி, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக இந்தியில் டாப்ஸிக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே போகிறது. காரணம் அம்மணி நடித்த 6 இந்தி படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக பாலிவுட்டின் ராசியான ஹீரோயினாக பார்க்கப்படுகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கும், கதைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்வதும் டாப்ஸியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
தற்போது டாப்ஸி நடிப்பில் இந்தியில் ‘ரேஷ்மி ராக்கெட்’ திரைப்படம் தயாராக உள்ளது. நம்ப தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி கதை எழுதியுள்ள இந்த படத்தை ஆகார்ஷ் குரானா இயக்கியுள்ளார், ரேணி ஸ்குருவாலா தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் டாப்ஸியின் திரைவாழ்க்கையிலேயே முக்கிய மைல் கல்லாக அமையும் என இப்போதே பேச்சுக்கள் அடிபடுகிறது. எனவே இதுவரை 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த டாப்ஸி, அதனை ரூ.8 கோடியாக உயர்த்திவிட்டாராம்.
இந்திக்கு இந்த சம்பளம் ஓ.கே. தான் என்றாலும் தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் சம்பளத்தை கேட்டால் ஓட்டம் பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான டாப் நடிகைகளான தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத்தையே டாப்ஸி பின்னுத் தள்ளி வருகிறாராம்.