“ஓவரா பண்றாங்க; ஒரு ஒத்துழைப்பே இல்ல”... இளம் நடிகை மீது படக்குழு பரபரப்பு புகார்...!
இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியானது.
பக்கா கோவை பெண்ணான அதுல்யா ரவி "காதல் கண் கட்டுதே" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது.
தற்போது சோசியல் மீடியாவில் விதவிதமான கிளாமர் போட்டோக்களை பதிவேற்றி ரசிகர்களை குதூகலமாக்கி வரும் அதுல்யா மீது பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.
சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “என் பெயர் ஆனந்தன்”.சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் காவ்யா புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்தப் படம் வரும் 27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியானது.
என் பெயர் ஆனந்தன் படம் ஒவ்வொரு முறை விருது பெறும் போதும் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர கூட மறுத்திருக்கிறார். அதேபோல் டீசர், போஸ்டர் என எதையுமே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிரவில்லையாம். அதுமட்டுமின்றி பட போஸ்டருக்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கேட்டு நொந்து போய்விட்டார்களாம்.
இந்த படத்தில் நடிக்கும் போது அதுல்யா ரவி ஒரு படத்தில் தான் நடித்திருந்தார். ஆனால் தற்போது சமுத்திரக்கனி, சுசீந்திரன், எஸ்.ஏ.சி. போன்ற இயக்குநர்களின் படத்தில் நடித்துவிட்டதால், தன்னைத் தானே முன்னணி நடிகையாக நினைத்துக் கொள்கிறார் என சரமாரியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.